Tuesday, April 15, 2014

பழமொழி - எப்படி படிக்க வேண்டும்

 பழமொழி - எப்படி படிக்க வேண்டும் 


எப்படி நாம் பல விஷயங்களை அறிந்து கொள்வது ?

புத்தகங்களை படித்து அறிந்து கொள்ளலாம். அது ஒரு வழி. அதை விட சிறந்த வழி, அப்படி புத்தகங்களைப் படித்து அறிந்து, தங்கள் அனுபவமும் கூடச் சேர்த்த அறிஞர்களை கண்டு அவர்கள் பேசுவதை கேட்டு அறிவது.

கற்றலை விட கேட்பது சிறந்தது.

வகுப்பில் ஆசிரியர் சொல்லித்தருவதை கவனமாக கேட்டாலே போதும், பலமுறை படிப்பதை விட அது சிறந்தது.

அது மட்டும் அல்ல,

நாம் வாசித்து அறியும் அறிவு மிக மிக சொற்பமாக இருக்கும். நாம் படித்தது மட்டும் தான் உலகம் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வாழ்க்கையில் மொத்தம் ஒரு பத்து பதினைந்து புத்தகங்களை வாசித்து விட்டு, எல்லாம் அறிந்தவர் போல் பேசுவார்கள்.  தாங்கள் அறிந்தது மட்டும்தான் அறிவு. அதைத் தாண்டி வேறு இல்லை என்று நினைத்துக் கொள்வார்கள்.

கற்றறிந்த பெரியவர்கள் பேசுவதைக் கேட்கும் போது அறிவின் வீச்சு புரியும்.  நாம்  அறிந்தது  ஒன்றும் இல்லை என்ற பணிவு வரும். அகந்தை அழியும். பேச்சு குறையும். மேலும் அறிய வேண்டும் என்ற ஆர்வம் பெருகும்.

கிணற்றுக்குள் இருக்கும் தவளை, தான் இருக்கும் கிணற்றைத் தவிர உலகில் வேறு தண்ணீர் கிடையாது என்று நினைப்பது போல நாம் படித்ததை மட்டும் வைத்துக் கொண்டு அறிவின் அகலம், கல்வியின் கரை இதுதான் என்று நினைக்கக் கூடாது.

அறிஞர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.


பாடல்


உணற்(கு)இனிய இன்னீர் பிறி(து)உழிஇல் என்னும்
கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.


பொருள் 

உணற்(கு) = பருகுவதற்கு

இனிய இன்னீர் = இனிமையான நல்ல நீர்

பிறி(து)உழிஇல் = உலகில் வேறு எங்கும் இல்லை

என்னும் = என்று சொல்லும்

கிணற்(று)  அகத்துத் = கிணற்றின் உள்ளே உள்ள

தேரை போல் = தவளை போல

ஆகார் = ஆக மாட்டார்கள்

கணக்கினை = அற நூல்களை

முற்றப்  = முழுவதும்

பகலும்  = நாள் முழுவதும்

முனியா(து) = சிரமம் பார்க்காமல்

இனிதோதிக் = இன்பத்துடன் கற்று

கற்றலிற் கேட்டலே நன்று = கற்பதை விட கேட்பதே நல்லது

படிப்பு ஒரு இனிமைதான். அதை விட கேட்பது மிக இனிது.

யாரிடம் கேட்கப் போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

கல்வி என்பது வெளியே இருந்து உள்ளே போவது.

அறிவு என்பது உள்ளே இருந்து வெளியே வருவது.

சில பேர் பிறவியிலேயே அறிவை கொண்டு வருவார்கள். அவர்கள் படிக்க படிக்க உள்ளிருந்து ஞானம் வெளியே வரும்.

அதை கேளுங்கள்.



No comments:

Post a Comment