Sunday, April 6, 2014

பழமொழி - கற்றொறுந்தான் கல்லாத வாறு

பழமொழி - கற்றொறுந்தான் கல்லாத வாறு


முந்தைய பாடலில், இளமையில் கற்க வேண்டும் என்று பார்த்தோம்.

எப்படி கற்க வேண்டும் ?

அதை இந்தப் பாடல் விளக்குகிறது.

கற்றவர்கள் முன்னால் ஒன்றைச் சொல்லும் போது நமக்கு ஒரு பயமும், தயக்கமும் (சோர்வு) வரும் அல்லவா ? அந்த சோர்வு வராமல் இருக்க, கற்கும் போது நாம் இது வரை எதுவும் கற்கவில்லை என்று உணர்ந்து,  இதுவரை கற்காமல் விட்ட காலத்திற்காக வருந்தி, ஆழமாக சிந்தித்து, கடினமான முயற்சியுடன், கற்க வேண்டும். கற்கும் போது "இது   தான் எனக்குத் தெரியுமே " என்ற இறுமாப்போடு படிக்கக் கூடாது.

பாடல்

சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்(று) அறியுமேல்
கற்றொறுந்தான் கல்லாத வாறு.


பொருள் 


சொற்றொறும் = சொல் தோறும். ஒவ்வொரு முறை சொல்லும் போதும்

சோர்வு படுதலால் = சோர்வு உண்டாவதால். சரியாக சொன்னோமா, முழுவதுமாகச் சொன்னோமா, விளங்கும் படி சொன்னோமா என்ற சோர்வு

சோர்வின்றிக் = களைப்பு இன்றி

கற்றொறும் = கற்கும் ஒவ்வொரு சமயத்திலும்

கல்லாதேன் = நான் இன்னும் முழுமையாக கற்காதவன்

என்று = என்று

வழியிரங்கி = அதற்காக இரக்கப் பட்டு

உற்றொன்று = உள்ளத்தில் ஒன்றே ஒன்றை (concentration )

சிந்தித்து = சிந்தித்து

உழன்று = சிரமப்பட்டு

ஒன்(று) அறியுமேல் = ஒன்றை அறிய வேண்டும். எப்படி என்றால்

கற்றொறுந்தான்  = கற்கும் தொறும்

கல்லாத வாறு = கல்லாதவன் எப்படி கற்பானோ அப்படி கற்க வேண்டும்.

அடக்கம் வேண்டும். நாம் எல்லாம் அறிந்தவர்கள், இனி அறிய என்ன இருக்கிறது என்று  நினைக்காமல், நாம் ஒன்றும் அறியாதவர்கள் என்ற அடக்க உணர்வோடு கற்க வேண்டும்.



1 comment:

  1. தன்னைப் பற்றிப் பணிவுடன் எண்ணி, முயற்சியுடன் கற்க வேண்டும் என்ற கருத்து அருமை. நன்றி.

    ReplyDelete