Thursday, April 10, 2014

சுந்தர காண்டம் - மலை போல் வந்த தடை

சுந்தர காண்டம் - மலை போல் வந்த தடை 



சுந்தர காண்டம் படித்தால் துன்பம் விலகும் என்று  சொல்லுவார்கள். அப்படி என்றால் எல்லோரும் சுந்தர காண்டம் படித்தால் போதுமே. எல்லா துன்பங்களும் விலகி விடுமே. வேறு ஒன்றும் செய்ய வேண்டாமே !

அப்படி அல்ல.

சுந்தர காண்டம்  படிப்பது,  நாம் முயற்சி செய்ய ஒரு தூண்டுகோலாக இருக்கும். (Motivation ).

சும்மா உக்காந்து கொண்டு "ஐயோ எனக்கு துன்பம் வந்து விட்டதே, என்ன செய்வேன்" என்று உறைந்து போய் விடாமல், முயன்று துன்பங்களைப் போக்க சுந்தர காண்டம் வழி காட்டுகிறது.

எதிர் காலம் எப்படி இருக்கும் என்று  தெரியாது.

சீதையைத் தேடிப்  போகிறான். முன் பின் தெரியாத ஊர். இராவணன் பெரிய அரக்கன். மாயாவி. எங்கே சீதையை மறைத்து வைத்திருப்பான் என்று தெரியாது. அந்த ஊரில் யாரிடமாவாது போய் கேட்க முடியுமா ? தானே கண்டு பிடிக்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, நடுவில் பெரிய கடல். பெரிய தடை.

தனி ஆளாகப் போகிறான். ஒரு துணையும் கிடையாது. வழி தெரியாது. ஊர் தெரியாது. பயங்கரமான எதிரி.

கிட்டத்தட்ட நம் நிலை மாதிரியே இருக்கிறது  அல்லவா.

கவலையில், துன்பத்தில் இருக்கும் எல்லோருக்கும் நிலை இதுதான்.

என்ன செய்ய வேண்டும் தெரியாது. எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாது. ஆயிரம் தடைகள் வேறு.

அனுமன் என்ன செய்தான் என்று ஒரு உதாரணம் தருகிறது  இராமாயணம். அதில் இருந்து  நம்பிக்கையும், உற்சாகமும் பெற.

அனுமன் பலசாலி, அறிவாளி...நாம் அப்படி இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம்.

அவன் சமாளிக்க வேண்டிய சவால்களும்  அப்படித்தானே.கடலைக் கடக்க வேண்டும். உங்களால முடியுமா ?

அவரவர் திறமை, வலிமையை பொறுத்து அவர்களின் சவால்களும் அமைகிறது.

உங்களாலும் முடியும். நம்பிக்கை கொள்ளுங்கள். செயல் படத் தொடங்குங்கள்.

அப்படி செய், இப்படிச் செய் என்று சொன்னால் "வந்துட்டானுக, அறிவுரை சொல்ல " என்று அலுத்துக்  கொள்வோம்.

அனுமன் என்ற  ஒருவன் இப்படிச் செய்தான் என்று கூறுவதன்  மூலம்,நீங்களும்  முயன்றால் வெற்றி பெறலாம் என்று சொல்லாமல் சொல்கிறது இராமாயணம்.


அனுமனின் வழியில் மைநாகம் என்ற மலை ஒன்று குறிக்கிடுகிறது. அவனைத் தடுத்து, இங்கு இளைப்பாறி விட்டு போ  என்கிறது.

அது பற்றி அடுத்து வரும் சில தினங்களில் பார்ப்போம்.

முதல் பாடல்


உந்தாமுன் உலைந்து உயர்வேலை
     ஒளித்தகுன்றம்
சிந்தாகுலம் உற்றது; பின்னரும்
     தீர்வில்அன்பால்
வந்துஓங்கி ஆண்டு ஓர்சிறு
     மானிடவேடம்ஆகி
எந்தாய்இதுகேள்என இன்ன
     இசைத்ததுஅன்றே.

பொருள்

உந்தாமுன் = உந்தி வருவதற்குள்

உலைந்து  = அச்சம் கொண்டு

உயர் = உயர்ந்த

வேலை = கடலில்

ஒளித்த குன்றம் = ஒளிந்து இருந்த மலை

சிந்தாகுலம் உற்றது = சிந்தனையில் மயக்கம் உற்றது

பின்னரும் = பின்னால்

தீர்வில்அன்பால் = எல்லையற்ற அன்பால்

வந்துஓங்கி = அனுமனின் முன் வந்து ஓங்கி நின்று

ஆண்டு  = அங்கு

ஓர் சிறு = ஒரு சிறிய

மானிடவேடம்ஆகி = மானிட உரு கொண்டு

எந்தாய் = என் தந்தை போன்றவனே

இது கேள் என = இதைக் கேள் என்று

இன்ன இசைத்ததுஅன்றே = சொல்லத் தொடங்கியது

இந்திரனுக்கு பயந்து  கடலில் ஒளிந்து இருந்தது மைநாகம் என்ற அந்த மலை.

என்ன ஆயிற்று என்று மேலும் பார்ப்போம்.


No comments:

Post a Comment