Monday, May 12, 2014

நள வெண்பா - காமம் என்ற நெருப்பு

நள வெண்பா - காமம் என்ற நெருப்பு 


முதலிலேயே சொல்லி விடுகிறேன், இந்த பாடல் வயது வந்தவர்களுக்கு மட்டும்.  வயது வராதவர்கள், அல்லது ஆண் பெண் உடல் கூறு சம்பந்தப் பட்ட வார்த்தைகளால் சங்கப்படுபவர்கள் இதை மேலும் படிக்காமல் இருப்பது நல்லது.

தமயந்தியின் நினைவால் நளன்  .வாடுகிறான். காமம் அவனை சுட்டு எரிக்கிறது.

அந்த சூட்டை தணிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறான்.

சூட்டுக்கு இதமாக ஏதாவது இளநீர் பருகலாம், கரும்புச் சாறு நல்லது, குளிர்ந்த நீர் குளத்தில் நீராடலாம், நல்ல நிழலில் போய் நிற்கலாம்....இவற்றால் இந்த காமம் என்ற சூட்டினால் விளைந்த தாகம் தீரலாம்....

பாடல்

கொங்கை இளநீரால் குளிர்ந்தஇளம் சொல்கரும்பால்
பொங்குசுழி என்னும் பூந்தடத்தில் - மங்கைநறும்
கொய்தாம வாசக் குழல்நிழற்கீழ் ஆறேனோ

வெய்தாமக் காம விடாய்.


பொருள்

கொங்கை இளநீரால் = (தமயந்தியின்) மார்புகள் என்ற இள நீரால்

குளிர்ந்த = குளிர்ச்சியான

இளம் = இளமையான

சொல்கரும்பால் = அவளுடைய சொல் என்ற கரும்பால்

பொங்கு = பொங்கி

சுழி = சுழித்து ஓடும்

என்னும் = என்ற

பூந்தடத்தில் = அவளுடைய தொப்பூழ் (வயறு)

மங்கை = பெண்

நறும் = வாசம் வீசும்

கொய் = கொய்த

தாம = மலர் சூடிய

வாசக் = வாசம் வீசும்

குழல் = குழல், தலை முடி

நிழற் கீழ்= நிழலின் கீழே. குழல் நிழல் தரலாம்....நிழல் போல குழலும் கருமையாக இருக்கும்.

ஆறேனோ = குளிர்வேனோ ?


வெய் = கொடுமையான

ஆம் = ஆன

காம விடாய். = காமத்தினால் வந்த தாகம்

அவள் மேல் எத்தனை ஆசை அவனுக்கு. உருகுகிறான்.




1 comment:

  1. அப்பா, ரொம்ப நாளைக்குப் பின் ஒரு ஜொள்ளுப் பாட்டு! அதுவும் சும்மா ரொம்ப நாள் கழித்து சிக்சர் அடித்த மாதிரி ஒரு பாட்டு!

    ReplyDelete