Tuesday, May 13, 2014

திருக்கோத்தும்பி - நான் யார் ?

திருக்கோத்தும்பி - நான் யார் ?


நான் யார் ?

நான் என்பது என் உடலா ? என் உள்ளமா ? என் நினைவுகளா ? என் அறிவா ? என் மனமா ? இவை அன்றி கண்ணுக்கு காணாத உயிரா ? ஆத்மாவா ?

எது நான் ?

நான் என்பது மாறிக்  .இருக்கிறது. இப்படி மாறும் நானில் மாறாத நான் யார் ?

காலம் காலமாக இந்த கேள்வி பெரிய பெரிய ஞானிகளை வாட்டி வதைத்து இருக்கிறது.

மாணிக்க வாசகரையும் இந்த கேள்வி விடவில்லை.

இருந்தாலும்,

இறைவா நீ என்னை ஆட்கொள்ளாவிட்டால்,  நானும்,என் அறிவும், என்ன ஆகியிருப்போம் ? என்னை இந்த உலகில் யார் அறிந்து இருப்பார்கள். உன் கருணையினால் என்னை ஆண்டு கொண்டதால் நான் பிழைத்தேன். அப்படிப் பட்ட சிவனின் தாமரை போன்ற பாதங்களில் சென்று நீ வணங்குவாய் என்று தேனியிடம் (தும்பி)  கூறுகிறார் அடிகள்.

பாடல்

நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்? மதி மயங்கி
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

பொருள்

நான் ஆர்? = நான் யார்

என் உள்ளம் ஆர்? = என் உள்ளம் யார்

ஞானங்கள் ஆர்? = என் அறிவு என்பது என்ன

என்னை யார் அறிவார் = நான் என்று சொல்லும் என்னை , அது என்ன என்று யார் அறிந்து சொல்ல முடியும் ?


வானோர் பிரான் = வானவர்களின் தலைவன் (பிரியாதவன் என்பது பிரான் என்று ஆயிற்று)

என்னை ஆண்டிலனேல்? = என்னை ஆட்கொல்லா விட்டால்

மதி மயங்கி = மதி மயங்கி . சிவன் ஏன்  மணிவாசகரை ஆட்கொள்ளவேண்டும்? அதனால் சிவனுக்கு கிடப்பது என்ன ? ஒன்றும் இல்லை. ஏதோ மதி மயங்கி, என்னை ஆட் கொண்டு விட்டான் என்று அடக்கத்தோடு அடிகள். நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை. அவன் என்னவோ மயக்கத்தில் எனக்கு அருள் செய்து விட்டான் என்கிறார்.


ஊன் ஆர் = மாமிசம் இருக்கும்

உடை தலையில் = உடைந்த மண்டை ஓட்டில்

உண் பலி = உணவு உண்ணும்

தேர் அம்பலவன் = அம்பலத்தில் ஆடும் அவனின்

தேன்  ஆர் = தேன் சொரியும்

கமலமே = தாமரை போன்ற திருப்பாதங்களில்

சென்று ஊதாய்; = சென்று ஊதாய்

கோத்தும்பீ! = அரச வண்டே

நான் என்ற  எண்ணமும்,அறிவும் இறை அருள் பெறும் போது நிறைவு பெறுகிறது.

இதையே வள்ளுவரும்

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலவறிவன் நற்றாள் தொழார் எனின்  என்றார்.

அறிவு, அருள் பெறும்போது அர்த்தம் பெறுகிறது



1 comment:

  1. இந்தக் கேள்விகளுக்கு மாணிக்கவாசகர் பதில் கண்டாரோ இல்லையோ தெரியாது; அனால் இந்தப் பாடலில் அவர் பதில் தரவில்லை.

    "மதி மயங்கி" என்பது தேனீக்கு பொருந்துமோ? "மதி மயங்கிப் பாடாய்" என்று தேனீயிடம் சொல்கிறாரோ?

    ReplyDelete