Monday, May 26, 2014

கம்ப இராமாயணம் - சூர்பனகை பற்றி கும்பகர்ணன்

கம்ப இராமாயணம் - சூர்பனகை பற்றி கும்பகர்ணன் 


கும்பகர்ணனும் இலக்குவனும் நேருக்கு நேர் போருக்கு நிற்கிறார்கள். அப்போது கும்ப கர்ணன் சொல்வான்.

"இலக்குவனா, நீங்கள் நான்கு பேர்  அண்ணன் தம்பிகள் - இராம, இலக்குவ, பரத சத்ருகனன் என்று. உங்களோடு உடன் பிறந்த பெண் பிள்ளைகள் யாரும் இல்லை. உங்களுக்கு அக்கா தங்கைகள் யாரும் இல்லை. இருந்திருந்தால் சகோதரி பாசம் என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

எங்க வீட்டுல அப்படி இல்லடா....நாங்கள் செய்த தவத்தால் ஒரு கொடி போன்ற பெண் எங்களோடு பிறந்தாள். அவள் ஒரு குற்றமும் செய்யாதவள். அவள் மூக்கை நீ வெட்டி விட்டாய். அவள் கூந்தலை பற்றி இழுத்த உன் கையை தரையில் விழச் செய்வேன், முடிந்தால் காத்துக் கொள் "

என்றான்.

சூர்பனகையை "கொடி " என்கிறான் கும்ப கர்ணன். அவள் மேல் அவ்வளவு பாசம், வாஞ்சை அவனுக்கு.

உனக்கு கூடப் பிறந்த அக்கா தங்கி இல்லாததால் சகோதரி பாசம் உனக்குத் தெரியவில்லை என்றான். தனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்பதில் அவனுக்கு பெரிய பெருமிதம். தவம் செய்து பெற்ற தங்கை என்கிறான்.

அவள் ஒரு பாவமும் அறியாதவள். அவளைப் போய் முடியைப் பிடித்து இழுத்து மூக்கை வெட்டி விட்டாயே என்று இலக்குவன் மேல் கும்ப கர்ணன் கோபம் கொண்டு உன் கையை வெட்டுகிறேன் பார் என்று கூறுகிறான்.

பாடல்

‘பெய் தவத்தின் ஓர் பெண் கொடி,
    எம்முடன் பிறந்தாள்,
செய்த குற்றம் ஒன்று இல்லவள்,
    நாசி வெஞ்சினத்தால்
கொய்த கொற்றவ! மற்று அவள்
    கூந்தல் தொட்டு ஈர்த்த
கை தலத்திடைக் கிடத்துவென்;
    காக்குதி ‘என்றான்.


பொருள்

‘பெய் தவத்தின் = செய்த தவத்தால், எங்களிடையே இருந்த தவத்தால்

ஓர் பெண் கொடி = ஒரே ஒரு பெண் கொடி. இரண்டு மூன்று இல்லை, ஆசைக்கு ஒரே ஒரு தங்கச்சி

எம்முடன் பிறந்தாள் = எங்களோடு பிறந்தாள்

செய்த குற்றம் ஒன்று இல்லவள் = ஒரு குற்றமும் செய்யாதவள்

நாசி = அவளின் மூக்கை

வெஞ்சினத்தால் = கொடிய சினத்தால்

கொய்த கொற்றவ! = வெட்டிய மன்னவனே

மற்று = மேலும்

அவள் = அவளுடைய

கூந்தல் தொட்டு = கூந்தலை தொட்டு

ஈர்த்த = இழுத்த

கை = உன் கைகளை

தலத்திடைக் = நிலத்தில்

கிடத்துவென் = கிடைக்கும் படி செய்வேன்

காக்குதி ‘என்றான். = முடிந்தால் காத்துக் கொள்  என்றான்

சூற்பனகையின் மூக்கு, காது, முலைகளை வெட்டியது ஒரு புறம் இருக்கட்டும்.  அவள் கூந்தலைப் பற்றி இழுத்ததைக் கூட கும்ப கர்ணனால் பொறுத்துக்  கொள்ள முடியவில்லை. அவள் கூந்தலை தொட்டு இழுத்த  உன் கைகளை  வெட்டுவேன் என்கிறான். 

தங்கையின் மற்ற அங்கங்களை வெட்டியதை வாயால் சொல்லக் கூட அவனால்  முடியவில்லை. 

1 comment:

  1. சூர்ப்பனகை செய்தது என்ன தவறு என்பதைப் பற்றிக் கம்பரின் கருத்து என்ன? ஏதாவது எழுதியிருக்கிறாரா?

    ReplyDelete