Sunday, May 4, 2014

நீதி நூல் - அழகென்னும் செருக்கு

நீதி நூல் - அழகென்னும் செருக்கு 


ஆணவம் பல வழியில் வரும்.

அழகு ஒரு வழி. நாம் எவ்வளவு அழகாக இருக்கிறோம் என்ற எண்ணம் ஆணவத்திற்கு அடிகோலும். எல்லா ஆணவமும் அழிவுக்கு, துன்பத்திற்கு வழி கோலும்.

அழகாய் இருக்கிறோம் என்று  படாதே. அழகான ஆடையை நீக்கி, உடலை கழுவாமல் கண்ணாடியில் பார்த்தால் தெரியும் எவ்வளவு அழகு என்று. சுடுகாட்டுக்குப் போய் பார்த்தால் நிறைய மண்டை ஓடுகள் கிடக்கும். அந்த மண்டை ஓடுகள் எல்லாம் ஒரு காலத்தில் உன் முகம் போலத்தான் இருந்தன என்று அறிந்து கொள் என்கிறது நீதி நூல்.

பாடல்

எழிலு ளேமெனச் செருக்குறு நெஞ்சமே யிழைதுகில் நீத்தங்கம்
கழுவிடாதுற நோக்குதி முகந்தனைக் கஞ்சந் தனில்நோக்கின்
எழுநி லத்திடை யுன்னின்மிக் காருள ரெனவறி வாயீமத்து
அழியும் வெண்டலை யுன்றலை போலிருந் தவணுற்ற தறிவாயே.

சீர் பிரித்த பின் 

எழில் உள்ளேம் என செருக்கு உறு நெஞ்சமே இழை துகில் நீத்து அங்கம் 
கழுவிடாது உற நோக்குதி முகம் தனை கஞ்சம் தனில் நோக்கின் 
எழு நிலத்திடை உன்னின் மிக்காருளர் என அறிவாய் மற்று 
அழியும் வெண் தலை உன் தலை போல் இருந்தவன் உற்றது அறிவாயே 

பொருள் 


எழில் உள்ளேம்  = அழகாக இருக்கிறோம் 

என = என்று 

செருக்கு உறு நெஞ்சமே = ஆணவம் கொள்ளும் மனமே 

இழை துகில் நீத்து = ஆடையை நீக்கி  

அங்கம் கழுவிடாது = உடலை கழுவாமல்  

உற நோக்குதி = ஆழ்ந்து நோக்கு 

முகம் தனை = முகத்தை 

கஞ்சம் தனில் = கண்ணாடியில் 

நோக்கின் = நோக்கினால் 
 
எழு நிலத்திடை = இந்த உலகில் 

உன்னின் மிக்காருளர் = உன்னைவிட அழகானவர்கள் இருக்கிறார்கள் 

என அறிவாய் = என்று அறிவாய் 

மற்று = அது மட்டும் அல்ல 
 
அழியும் வெண் தலை = அழியும் மண்டை ஓடு (வெண் தலை)

உன் தலை போல் = உன்னுடைய தலை போல ஒரு காலத்தில் 

இருந்தவன்  = இருந்ததை 

உற்றது அறிவாயே  = உணர்ந்து அறிந்து கொள் 



1 comment:

  1. சும்மா பிடனியில் அடிப்பது போல ஒரு பாடல்!

    ReplyDelete