Saturday, May 24, 2014

திருவிளையாடற் புராணம் - பெண்ணும் மரமும்

திருவிளையாடற் புராணம் - பெண்ணும் மரமும் 


பெண்கள் ஊடல் கொள்ளும் போது தங்கள் ஆபரணங்களை அணிந்து கொள்வது இல்லை. அவற்றைத் துறந்து வெறுமையாக இருப்பார்கள். வெயில் காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து வெறுமையாக இருப்பதைப் போல.

காதல் கொண்டு கூடும்போது உள்ளம் மகிழ்ந்து உடல் பூரித்து குழைந்து இருப்பவர்களைப் போல, மழைக் காலத்தில் மரங்கள் தளிர் விட்டு மப்பும் மந்தாரமுமாக இருக்கும்.

அன்புக் காதலர்கள் அவர்களை விட்டு நீங்கினால் கண்ணில் நீர் வர உடல் எல்லாம் ஒரு வித பசலை படரும் அது மரங்களில் பசலை படர்வது போலவும்

ஒரு பெண் தன் காமத்தை, காதலை வாய் விட்டுச் சொன்னால் அது ஊர் பூராவும் வதந்தியாகப் பரவி விடும் அது மரங்களில் மலர்கள் கொத்து கொத்தாக பூத்து கிடப்பதைப் போல இருக்கிறது என்கிறார் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தில்.....

பாடல்

ஊடினார் போல வெம்பி யிலையுதிர்ந் துயிரன் னாரைக்
கூடினார் போல வெங்குங் குழைவரத் தழைத்து நீங்கி
வாடினார் போலக் கண்ணீர் வாரமெய் பசந்து மையல்
நீடினா ரலர்போற் பூத்து நெருங்கின மரங்க ளெல்லாம்.

சீர் பிரித்த பின்

ஊடினார் போல வெம்பி இலை உதிர்த்து உயிர் அன்பினாரை 
கூடினார் போல எங்கும் குழை வரத் தழைத்து நீங்கி
வாடினார் போலக் கண்ணீர் வார மெய் பசந்து மையல்
நீடினார் அலர் போல் பூத்து நெருங்கின மரங்க ளெல்லாம்.


பொருள் 

ஊடினார் போல = ஊடல் கொண்ட பெண்களைப் போல

வெம்பி = வெம்பி

இலை உதிர்த்து = இலை உதிர்த்து

உயிர் அன்பினாரை = உயிருக்கு உயிரான அன்பினாரை (காதலரை, கணவரை)

கூடினார் போல = கூடியவர்களைப் போல

எங்கும் = எல்லா இடங்களிலும்

குழை = இலைகள்

வரத் தழைத்து = வரும் போது எப்படி தழைத்து நிற்குமோ அது போல

 நீங்கி = கணவரை, காதலரை நீங்கிய பெண்கள்

வாடினார் போலக் =எப்படி வாடிப் போவார்களோ  அதி போல

கண்ணீர் வார = மரக் கண்களில் நீர் கசியும்

மெய் பசந்து = உடல் பசுமை நிறம் அடைந்து

மையல் = காதல், காமம்

நீடினார் = சொன்ன பெண்களைப் பற்றி

அலர் போல் = வதந்தி போல

பூத்து  = மலர்கள் கொத்து கொத்தாக பூத்து

நெருங்கின மரங்க ளெல்லாம் மரங்கள் எல்லாம் நெருங்கி இருந்தன



1 comment:

  1. மரத்துக்கு உவமையாகப் பெண்ணை வைத்து, அதுவும் நான்கு முறை, நான்கு விதமாக ... என்ன ஒரு பாடல்!

    ReplyDelete