Thursday, May 8, 2014

பழ மொழி - சொல்லாக்கால் சொல்லுவது இல்

பழ மொழி - சொல்லாக்கால் சொல்லுவது இல்


சொல் திறம், சொல் வன்மை என்பது மிக மிக இன்றி அமையாதது.

சில பேர் நன்றாகப் படித்து அறிவுள்ளவர்களாக இருப்பார்கள். கடுமையாக வேலையும் செய்வார்கள். இருந்தாலும் வாழ்வில் முன்னேற முடியாமல் தவிப்பார்கள். அவர்களை விட அறிவும், அனுபவும் குறைந்தவர்கள் மேலே மேலே சென்று கொண்டே இருப்பார்கள்.

காரணம் - சொல் திறம். எப்படி பேச வேண்டும், யாரிடம் பேச வேண்டும், எதைப் பற்றி பேச வேண்டும் என்ற பேச்சுத் திறன் இன்மையால்.

பெரும் தவம் செய்த முனிவர்களுக்குக் கூட நா வன்மை இல்லை என்றால் அவர்களின் தவத்தால் ஒரு பயனும் இல்லை என்கிறது இந்த பழமொழிப் பாடல்.

பாடல்

கல்லாதான் கண்டகழிநுட்பம் காட்டரிதால்
நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென்
சொல்லால் வணக்கி வெகுண்(டு)அடு கிற்பார்க்கும்
சொல்லாக்கால் சொல்லுவது இல்.

பொருள் 

கல்லாதான் = படிக்காதவன்

கண்ட = அறிந்த

கழிநுட்பம் = ஆழ்ந்த நுண்ணிய பொருள்

காட்டரிதால் = மற்றவர்களுக்கு சொல்ல முடியாது

நல்லேம்யாம் = இருப்பினினும், அவன் தான் நல்லவன் அறிஞன் என்று

என்றொருவன் = என்று ஒருவன் தனக்குத் தானே

நன்கு மதித்தலென் = நன்றாக பெருமை பட்டுக் கொண்டால் என்ன பயன்

சொல்லால் = மந்திரங்களால்

வணக்கி = வழிபட்டு

வெகுண்(டு) = சாபம் தரும் அளவுக்கு கோபம் கொண்டு

அடு கிற்பார்க்கும் = செயல்களை செய்யும் முனிவர்களுக்கும்

சொல்லாக்கால் சொல்லுவது இல் = தாங்கள் அறிந்தவற்றை சொல்ல முடியாவிட்டால் , அவர்களைப் பற்றி சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.

மற்றவர்களிடத்து எடுத்துச் சொல்ல முடியாவிட்டால், கற்றவனும் கல்லாதவன் போலவே கருதப்  படுவான்.

என்ன படித்து என்ன பயன், பரிட்சையில் ஒழுங்காக எழுதாவிட்டால் குறைந்த மதிப்பெண்கள் தானே கிடைக்கும்.

அறிந்ததை, தெரிந்ததை, செய்ததை மற்றவர்கள் அறியும்படி அழகாகச் சொல்லத் தெரிய வேண்டும்.

நீங்கள் அது மாதிரி சொல்லா விட்டால் உங்களைப் பற்றி மற்றவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.  குடத்தில் இட்ட விளக்காய் இருக்க வேண்டியதுதான்.

பேசப் படியுங்கள்.



No comments:

Post a Comment