Wednesday, May 7, 2014

நீத்தல் விண்ணப்பம் - நின்னைச் சிரிப்பிப்பனே

நீத்தல் விண்ணப்பம் - நின்னைச் சிரிப்பிப்பனே


மாணிக்க வாசகரில் கிண்டல், நகைச்சுவை உள்ள பாடல்களை காண்பது அரிது.  "அழுதால் உன்னைப் பெறலாமே " என்று பாடியவர்.

அவர் சிவனிடம் சொல்கிறார்...

"நீ பெரிய வீரனாக இருக்கலாம். நீ என்னை கை விட்டு விட்டால் நான் என்ன ஆவேன். திக்குத் தெரியாமல் அலைவேன். என்னை எல்லோரும் கேட்பார்கள், "இப்படி அலைகிறாயே, நீ யாருடைய அடியான் " என்று. அப்போது அவர்களிடம் நான் உன் அடியவன் என்று சொல்லுவேன். எனகென்ன , அவர்கள் உன்னை பார்த்துதான் சிரிப்பார்கள். அப்படி அவர்கள் உன்னை பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்றால் என்னை கை விட்டு விடாதே"


பாடல்

தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழலரப்பூண்
வீரஎன் றன்னை விடுதிகண் டாய்விடி லென்னைமிக்கார்
ஆரடி யான்என்னின் உத்தர கோசமங் கைக்கரசின்
சீரடி யார்அடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே.


பொருள்

தாரகை போலும் = நட்சத்திரம் போல (வெண்மையாக, சிறு புள்ளி போல )

தலைத் = தலைகளை அதாவது மண்டை ஓடுகளை

தலை மாலைத் = உன் தலையில் மாலையாக கொண்டவனே

தழலரப்பூண் = தழல் + அரவு + பூண் = வேள்வித் தீயில் வந்த பாம்பை அணிகலமாக அணிந்த

வீர = வீரனே 

என் றன்னை = என்னை

விடுதி கண் டாய் = விட்டு விட்டாதே

விடி லென்னைமிக்கார் = விடில் + என்னை + மிக்கார் = அப்படி நீ விட்டு விட்டால் , மற்றவர்கள்

ஆரடி யான் = யார் + அடியான் = நீ யாருடைய அடியவன்

என்னின் = என்று கேட்டால்

 உத்தர கோசமங் கைக்கரசின் = உத்தர கோச மங்கைக்கு அரசனின்

சீரடியார் அடியானென்று = அடியவர்களின் அடியவன் என்று கூறி 

 நின்னைச் சிரிப்பிப்பனே. = உன்னை பார்த்து அவர்கள் சிரிக்கும்படி செய்வேன்

பழி உனக்கு மட்டும் அல்ல, உன் மற்ற அடியார்களுக்கும்தான் என்று சிவனின் மேல்  அழுத்தத்தை (Pressure ) அதிகரிக்கிறார்.

மற்ற பாடல்களில் இருந்து வித்தியாசமான பாடல்



No comments:

Post a Comment