Tuesday, May 6, 2014

நீதி நூல் - அதிகம் உண்டால் ஆற்றல் அழியும்

நீதி நூல் - அதிகம் உண்டால்  ஆற்றல் அழியும் 


உணவில் இருந்து நமக்கு சக்தி கிடைக்கிறது.

அதிகம் உண்டால் அதிகம் சக்தி கிடைக்க வேண்டும் அல்லவா ?

 அதுதான் இல்லை.

அளவோடு உண்டால், அது உடலில் சக்தியாக மாறி உடல் எங்கும்  இயங்கும். அதுவே அளவுக்கு அதிகமானால் ?

ஒரு குளத்தில் கொஞ்சம் நீர் இருக்கிறது. மேலும் கொஞ்சம் நீர் வந்தால் குளம்  நிறையும்.மேலும் மேலும் நீர் வந்து கொண்டே இருந்தால், அது குளத்தின் கரையை உடைத்து இருக்கின்ற நீரையும் சேர்த்து கொண்டு போய் விடும். அது போல அளவுக்கு அதிகமாக உண்டால் உடலில் ஏற்கனவே உள்ள சக்தியையும் அது கொண்டு போய் விடும்.

சரி, அந்த அளவை எப்படி கண்டு பிடிப்பது ?

உணவு உண்ட பின் வயிறு பள்ளமாக இருக்க வேண்டும். மேடாக மாறக் கூடாது. அதாவது வயிறு முட்ட சாப்பிடக் கூடக் கூடாது.

பாடல்

கொள்ளுரு நீரைக் கொண்ட குளங்கரை புரண்டு முன்னம்
உள்ளநீ ரையுமி ழக்கும் உண்மைபோற் பேர கட்டின்
பள்ளமே டாக வுண்ணும் பதமுடல் வளத்தைப் போக்கும்
எள்ளலில் சிற்று ணாவற் றுடலெங்கு மியங்கு மாலோ.

சீர் பிரித்த பின் 

கொள்ளுரு நீரைக் கொண்ட குளங்கரை புரண்டு முன்னம்
உள்ள நீரையும் இழக்கும் உண்மை போல்  பேர் அகட்டின் 
பள்ளம்  மேடாக உண்ணும்  பதம் உடல்  வளத்தைப் போக்கும்
எள்ளலில் சிற் உணவால் அற்று உடலெங்கும் இயங்கும் மாலோ 


பொருள் 

கொள்ளுரு நீரைக் = அளவுக்கு அதிகமான நீரைக்

கொண்ட  குளங்கரை = கொண்ட குளத்தின் கரை

புரண்டு = உடைந்து

முன்னம் = முன்பே

உள்ள = உள்ள

நீரையும் இழக்கும் உண்மை போல் = இழக்கும் உண்மை போல

பேர் அகட்டின் = அகடு என்றால் வயிறு

பள்ளம் = ஒட்டிய வயிறு

 மேடாக = உப்பி பெரிதாகும் வரை

உண்ணும்  பதம் = உண்ணும் உணவு

உடல்  வளத்தைப் போக்கும் = உடல் வளத்தை போக்கும்

எள்ளலில் = சிறந்த

சிற் உணவால் =கொஞ்சமான உணவை  உண்டால் 

அற்று உடலெங்கும் இயங்கும் மாலோ = அது செரிமானமாகி சக்தியாக உடல் எங்கும்  இயங்கும்.


வயிறு முட்ட உண்ணாதீர்கள். அது சக்தியை அழிக்கும். 

வயறு ஒட்டி இருக்கும் படி உண்ணுங்கள். அது உடலுக்கு சக்தியை  தரும்.


No comments:

Post a Comment