Wednesday, June 11, 2014

இராமாயணம் - கடல் எனும் ஆடை உடுத்த நில மங்கை

இராமாயணம் - கடல் எனும் ஆடை உடுத்த நில மங்கை 


பெண்கள் உடுத்தும் உடைகள் காற்றில் லேசாக சிலு சிலுக்கும். அலை அலையாக அவர்கள் உடலோடு ஒட்டி உறவாடும். அதைப் பார்க்கும் போது கம்பனுக்கு ஒன்று தோன்றுகிறது.

இந்த நிலம் என்ற மங்கை கடல் என்ற ஆடையை எடுத்து உடுத்திக் கொண்டு இருக்கிறாள். அந்த ஆடை , அதன் ஓரங்களில் சிலிர்ப்பது , அந்தக் கடலில் அலை அடிப்பது போல இருக்கிறது.

சூர்பனகை சொல்லுகிறாள் இராவணனிடம்,

"மீன்கள் ஆடும் கடலை  மேகலையாக இந்த உலகம் உடுத்திக் கொள்ள, அந்த உலகில், தேன் கொண்ட மலர்களை சூடிய , சிறிய இடை கொண்ட சீதையோடு நீ உறவாடு, உன் வாளின் வலிமையை இந்த உலகம் காணும் படி, இராமனை வென்று எனக்குத் தா...நான் அவனோடு உறவாட"

பாடல்


“மீன்கொண்டு ஊடாடும் வேலை
    மேகலை உலகம் ஏத்தத்
தேன்கொண்டு ஊடாடும் கூந்தல்,
    சிற்றிடைச் சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ; உன்
    வாள் வலி உலகம் காண,
யான் கொண்டு ஊடாடும் வண்ணம்,
    இராமனைத் தருதி என்பால்.‘

பொருள் 

“மீன்கொண்டு = மீன்களை கொண்டு

 ஊடாடும் = ஆடும்

வேலை = கடல் எனும்

மேகலை = மேகலை. பெண்கள் இடையில் உடுத்தும் ஒரு ஆபரணம்.

உலகம் ஏத்தத் = நில மகள்  அணிந்து கொள்ள

தேன்கொண்டு ஊடாடும் கூந்தல் = தேன் கொண்ட மலர்களை கூந்தலில் சூடிக் கொண்ட

சிற்றிடைச் = சிறிய இடை

சீதை என்னும் = சீதை என்ற

மான் கொண்டு ஊடாடு நீ = மானை கொண்டு நீ ஊடல் ஆடு

 உன் வாள் வலி உலகம் காண = உன் வாளின் வலிமையை உலகம் காண

யான் கொண்டு ஊடாடும் வண்ணம் = நான் கொண்டு ஊடல் ஆடும் வண்ணம்

இராமனைத் தருதி என்பால் = இராமனை எனக்குத் தா

நீ சீதையை எடுத்துக் கொள். எனக்கு இராமனைத் தா என்கிறாள்.

சீதை மேல் காமத்தை விதைக்கும் அதே நேரத்தில் இராவணனின்  வீரத்தையும் விசிறி விடுகிறாள்.



No comments:

Post a Comment