Thursday, June 12, 2014

அதிசயப் பத்து - வைப்பு மாடு

அதிசயப் பத்து - வைப்பு மாடு 



இறைவனை எப்போது நினைப்போம் ?

எப்போதாவது துன்பம் வந்தால் அவனை நினைப்போம். ஐயோ, இந்த துன்பம் என்னை இப்படி வாட்டுகிறதே, இதற்கு ஒரு விடை இல்லையா, நான் என்ன செய்வேன், இறைவா நீ தான் இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும், உன் கோவிலுக்கு வருகிறேன், பூஜை செய்கிறேன்  என்று மனிதன் துன்பம் வரும் போது இறைவனை நினைக்கிறான்.

துன்பம் வரும். அந்த காலத்தில் நமக்கு உதவுபவன் இறைவன் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும்.

துன்பம் வரவே வராது. வந்தாலும் நான் தனி ஆளாக அவற்றை சமாளித்துக் கொள்வேன் என்று ஆணவம் கொள்ளக் கூடாது.

அப்படி இறைவனை நினைக்காமல், பெண்கள் பின்னால் சுற்றித் திரிந்த என்னையும் ஆட்கொண்டு, தன் அடியவர்களோடு சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்ன என்று சொல்லுவது என்று அதிசயிக்கிறார் மாணிக்க வாசகர்.

பாடல்

வைப்பு, மாடு, என்று; மாணிக்கத்து ஒளி என்று; மனத்திடை உருகாதே,
செப்பு நேர் முலை மடவரலியர்தங்கள் திறத்திடை நைவேனை
ஒப்பு இலாதன, உவமனில் இறந்தன, ஒள் மலர்த் திருப் பாதத்து
அப்பன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!


பொருள்

வைப்பு, மாடு, = இளைத்த காலத்தில் உதவும் செல்வம். சேமித்து வைத்த செல்வம். சேம நிதி. மாடு என்றால் செல்வம்.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. 

என்பது வள்ளுவம்


என்று = என்று

 மாணிக்கத்து ஒளி என்று = மாணிக்கத்தின் ஒளி என்று

மனத்திடை உருகாதே = மனதில்    நினைத்து உருகாமல்

செப்பு நேர் முலை = செப்புக் கிண்ணங்கள் போல உள்ள மார்பகங்களைக் கொண்ட

மடவரலியர்தங்கள் = இளம் பெண்களின்

திறத்திடை = மையலில்

நைவேனை = நைந்து கிடக்கும் என்னையும்

ஒப்பு இலாதன = தனக்கு ஒப்பு ஒருவன் இல்லாத

உவமனில் இறந்தன = உவமை என்று காட்ட ஒன்றும் இல்லாத

ஒள் மலர்த் திருப் பாதத்து = சிறந்த மலர் போன்ற திருவடிகளில்

அப்பன் ஆண்டு = என் அப்பன் என்னை ஆட்கொண்டு

தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! = தன்னுடைய அடியவர்களில் என்னையும் ஒருவனாக சேர்த்துக் கொண்ட அதிசயத்தை கண்டு வியக்கிறேன்

நான் என்ன செய்து விட்டேன் என்று என்னை இறவன் ஆட்கொண்டான் என்று அவ்வளவு பணிவுடன் சொல்கிறார் மணிவாசகப் பெருந்தகை.

உங்களுக்கும் அருள்வான் என்பது அவர் தரும்  நம்பிக்கை.



1 comment:

  1. "இறைவன் அடியாரில் சேர்ந்ததும் இறைவன் அருளால்தான்" என்கிறார்!

    ReplyDelete