Tuesday, June 17, 2014

கந்தர் அநுபூதி - மறைக்கும் கல்வி உள்ளவர்கள்

கந்தர் அநுபூதி - மறைக்கும் கல்வி உள்ளவர்கள் 


நாம் உண்மையை மற்றவர்களிடம் இருந்து கேட்டுப் பெற்றுக் கொள்ள முடியுமா.

ஞானம் சொல்லித் தந்து வருமா ?

ஒருவர் எவ்வளவுதான் கற்று அறிந்த ஞானியாக இருந்தாலும், கற்ற அனைத்தையும் இன்னொருவருக்கு தந்து விட முடியுமா ?

முடியாது என்கிறார் அருணகிரி நாதர்.

"கரவாகிய கல்வி உளார்"  கரவு என்றால் மறைத்தல் என்று பொருள். அறிந்தவர்கள் அனைத்தையும் மற்றவர்களுக்குச் சொல்லித்  .தருவது இல்லை. அது கல்வியின் இயற்கை குணம். கல்வியின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க, ஒருவன் தன்னை  திடப் படுத்திக் கொள்ள நினைப்பான். தான் நிலைத்த பின் மற்றவர்களுக்கு தரலாம் என்ற எண்ணம் வரும். அவன் எப்போது திருப்தி அடைந்து, மற்றவர்களுக்குத் தருவது ?


அது மட்டும் அல்ல, தனக்குத் தெரிந்த அனைத்தையும் இன்னொருவனுக்கு சொல்லுவது என்றால், கேட்பவனின் தகுதி பார்க்க வேண்டும். குரங்கு கை பூ மாலையாகப் போய் விடக் கூடாது.

இறைவா, தன்னிடம் உள்ள கல்வியை மறைத்து மீதியை மற்றவர்களுக்குத் தரும் கல்வியாளர்களிடம் சென்று என்னை நிற்க வைக்காமல் நீயே எனக்கு உபதேசம் செய். தலைவா, குமரா, படைகளைக் கொண்டவனே, சிவ யோகம் தரும் தயை  உள்ளவனே என்று முருகனிடம் உருகுகிறார் அருணகிரி.

பாடல்


கரவா கியகல் வியுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோ கதயா பரனே.

சீர் பிரித்த பின் 


கரவாகிய கல்வி உளார் கடை சென்று 
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ 
குரவா குமரா குலிச ஆயுதம் 
குஞ்சரவா சிவ யோக தயா பரனே 

பொருள் 


கரவாகிய கல்வி உளார் = மறைக்கக் கூடிய கல்வியை உடையவர்கள் 

கடை சென்று = வாசலில் சென்று 

இரவா வகை = வேண்டாது இருக்கும்படி 

மெய்ப் பொருள் ஈகுவையோ = மெய்யான பொருளை நீயே எனக்குத் தா 

குரவா = தலைவா 

குமரா = குமரா 

குலிச ஆயுதம் = குலிசம் என்ற ஆயுதம் தாங்கிய 
 
குஞ்சரவா = குஞ்சரவா 

சிவ யோக தயா பரனே = சிவ யோகத்தைத் தரக்கூடிய அன்புள்ளவனே 

 

No comments:

Post a Comment