Monday, June 2, 2014

இராமாயணம் - என் மூக்கை அல்ல, உம் குலத்தை அரிந்தீர்

இராமாயணம் - என் மூக்கை அல்ல, உம் குலத்தை அரிந்தீர் 


இந்த காட்டை விட்டு ஓடிப் போ என்று இராமன் சொன்ன பின், சூர்பனகை சொல்கிறாள்.

"உன் தங்கை அழகான மூக்கினை இழந்தாள்" என்று சொல்பவரின் நாக்கை அரியும் என் அண்ணன் இராவணன். நீங்கள் என் மூக்கை அறுக்கவில்லை, உங்கள் குலத்தின் வேரை அறுத்து விட்டீர்கள். இனி உங்களுக்கு புகலிடம் இல்லை. என்னுடைய இந்த அழகை எல்லாம், தரையில் வீசி விட்டீர்களே

என்று வீரம் பேசுகிறாள் சூர்பனகை.




பாடல்

"ஆக்க அரிய மூக்கு, உங்கை 
     அரியுண்டாள்" என்றாரை 
நாக்கு அரியும் தயமுகனார்; 
     நாகரிகர் அல்லாமை, 
மூக்கு அரிந்து, நும் குலத்தை 
     முதல் அரிந்தீர்; இனி, உமக்குப் 
போக்கு அரிது; இவ் அழகை எல்லாம் 
     புல்லிடையே உகுத்தீரே!'

பொருள்

"ஆக்க = ஆக்கத்திற்கு , அழகுக்கு

அரிய மூக்கு = அருமையான மூக்கை

உங்கை = உன் தங்கை

அரியுண்டாள்" = வெட்டுக் கொடுத்தாள்

என்றாரை  = என்று சொல்பவர்களை கூட

நாக்கு அரியும்= நாக்கை வெட்டுவான்

தயமுகனார் = தச (பத்து ) முகங்களைக் கொண்ட இராவணன். அப்படி சொன்னவர்களின் நாக்கை வெட்டுவான் என்றால், சூர்பனகையின் மூக்கை வெட்டியவர்களை அவன் என்ன செய்வான் ?


நாகரிகர் அல்லாமை = ஒரு நாகரிகம் இல்லாமல்

மூக்கு அரிந்து = என் மூக்கை வெட்டி

நும் குலத்தை = உங்கள் குலத்தின்

முதல் அரிந்தீர் = வேரை வெட்டி விட்டீர்கள். நீங்களே உங்கள் குலத்தின் கருவறுத்து விட்டீர்கள்

இனி, உமக்குப் = இனி உங்களுக்கு

போக்கு அரிது; = போகும் இடம் இல்லை

இவ் அழகை எல்லாம் = இந்த அழகை எல்லாம்

புல்லிடையே உகுத்தீரே!' = புல்லில் போட்டு விட்டீர்களே

கோபம் ஒரு புறம், வலி ஒரு புறம், வீரம் ஒரு புறம், அண்ணன்  மேல் கொண்ட பாசம் ஒரு புறம், அழகு போயிற்றே என்ற ஆதங்கம் ஒரு புறம், தன்னை ஏற்றுக் கொள்ளவில்லையே என்ற ஏக்கம் ஒரும் புறம்....

சூர்பனகை உணர்சிகளின் உச்சத்தில் இருக்கிறாள்...

கம்பனின் கவி அதை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து காட்டுகிறது...

என்ன புண்ணியம் செய்தோமோ இதை எல்லாம் இரசிக்க !!




No comments:

Post a Comment