Saturday, June 28, 2014

இராமாயணம் - ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது

இராமாயணம் - ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது

இராமனிடம் சவரி சொல்கிறாள்...."இராமா, நீ வருவதற்கு முன்னால் ஈசனும், பிரமனும், எல்லா தேவர்களும் , இந்திரனும் இங்கு வந்து இருந்தார்கள். வந்தவர்கள் என்னிடம் உன் குற்றமற்ற தவத்தின் பலன் உனக்கு கிடைக்கப் போகிறது. இராமனுக்கு வேண்டிய பூசைகளை செய்து நீ எம்மிடம் வந்து சேர்வாயாக என்று கூறிச் சென்றனர் என்றார்.

பாடல்

ஈசனும், கமலத்தோனும், இமையவர் 
     யாரும், எந்தை! 
வாசவன் தானும், ஈண்டு வந்தனர் 
     மகிழ்ந்து நோக்கி, 
"ஆசு அறு தவத்திற்கு எல்லை 
     அணுகியது; இராமற்கு ஆய 
பூசனை விரும்பி, எம்பால் 
    போதுதி" என்று, போனார்.

பொருள்

ஈசனும் = சிவனும்

கமலத்தோனும் = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

இமையவர் யாரும் = தேவர்கள் எல்லோரும்

எந்தை! = எம் தந்தை போன்ற

வாசவன் தானும் = இந்திரன் தானும்

ஈண்டு வந்தனர் = இங்கு வந்தனர்

மகிழ்ந்து நோக்கி = என்னை மகிழ்ந்து நோக்கி

"ஆசு அறு தவத்திற்கு = குற்றம் அற்ற தவத்திற்கு

 எல்லை அணுகியது = பலன் கிடைக்கப் போகிறது

இராமற்கு = இராமனுக்கு

ஆய பூசனை விரும்பி = செய்ய வேண்டிய பூஜைகளை எல்லாம் செய்து

எம்பால் போதுதி" என்று, போனார் = எம்மிடம் வந்து சேர்வாயாக என்று கூறிச் சென்றார்


கம்பன் காட்டிய கடவுள் என்று தனியாக எழுதலாம். 

இராமனை திருமாலின் அவதாரம் என்று சொல்லாமல் சொல்லிய இன்னொரு பாடல் இது. 

சிவனும், பிரமனும், இந்திரனும் மற்ற எல்லா தேவர்களும் வந்தார்கள் ஆனால்  அந்த வரிசையில் திருமால் இல்லை . ஏன் ?

திருமால் தான் இராமனாக அவதரித்து இருக்கிறான் என்று சொல்லாமல் சொல்லிய  பாடல் இது. 

சவரியின் குற்றமற்ற நீண்ட கால தவப் பயன் இராமன் அவளிடம் வந்தான். 

தவம் , கடவுளை உங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தும். 

வருகிறவன் இராமன் என்று அவளுக்குத் தெரியாது. சிவனும், பிரமனும் , இந்திரனும், மற்றைய தேவர்களும் அவளிடம் வந்து சொல்கிறார்கள்...

தவத்தின் பெருமையை என்ன என்று சொல்லுவது. 

 

No comments:

Post a Comment