Saturday, June 21, 2014

அடைக்கலப் பத்து - கல்வி ஞானம் இல்லா அழுக்கு மனம்

அடைக்கலப் பத்து - கல்வி ஞானம் இல்லா அழுக்கு மனம் 


கல்வி வேறு ஞானம் வேறா ?

கல்விக்கு ஒரு அதிகாரம் வைத்த வள்ளுவர், அறிவுடைமைக்கு தனியாக ஒரு அதிகாரம் வைத்து இருக்கிறார் . இரண்டும் ஒன்று என்றால் எதற்கு இரண்டு அதிகாரம்.

கல்வி வெளியில் இருந்து உள்ளே போவது.

ஞானம் உள்ளிருந்து வெளியே வருவது.

படிக்கும் எல்லோருக்கும் ஒரே பொருளா தோன்றுகிறது ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பொருள் தோன்றுகிறதே ஏன்?

உள்ளிருக்கும் ஞானம்.

மணி வாசகர் சொல்கிறார்...

இந்த உடம்பு ...புழுக்கள் நிறைந்த உடம்பு. அதில் கல்வியும் இல்லை, ஞானமும் இல்லை. பொல்லாத சிந்தனைகள், ஆசைகள் மட்டும் நிறைய இருக்கிறது. அழுக்கு படிந்த மனம். கரை படிந்த மனம். இவற்றை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன்.

உடம்பாலும் புண்ணியம் இல்லை. அறிவும் ஞானமும் இல்லை. மனமாவது ஒழுங்காக இருக்கிறதா என்றால், அதுவும் அழுக்கு அடைந்து இருக்கிறது.

நான் என்ன செய்வேன் ?

இது ஏதோ மணிவாசகர் தனக்கு சொன்னது போலத் தெரியவில்லை. நம் எல்லோருக்கும் சேர்த்து சொல்லி இருக்கிறார் என்றே படுகிறது.

இறைவா, உன்னிடம் அடைக்கலமாக வந்து விட்டேன். எனக்கு ஒன்றும் தெரியாது. நீ பார்த்து  ஏதாவது செய் என்று தன்னை முழுமையாக அடைக்கலம் தந்து விடுகிறார்.

பாடல்


செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த
பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான், பாவியேன்;
புழுக்கண் உடைப் புன் குரம்பை, பொல்லா, கல்வி ஞானம் இலா,
அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே.


பொருள்

செழுக் = செழுமையான

கமலத் = தாமரை மலர்களின்

 திரள்  அன = தொகுப்பு போன்ற

நின் சேவடி சேர்ந்து = உன் திருவடிகளை அடைந்து

அமைந்த = அமைதி அடைந்த

பழுத்த = கனிந்த

மனத்து = மனம் உள்ள

அடியர் உடன் போயினர் = அடியவர்கள் உன் உடன் போயினர்

யான் = நான்

பாவியேன் = பாவியேன்

புழுக்கண்  = புழுக்கள்

உடைப் புன் குரம்பை =உடைய இந்த உடம்பு

பொல்லா = பொல்லாதது

 கல்வி ஞானம் இலா = கல்வியும் ஞானமும் இல்லாதது

அழுக்கு மனத்து அடியேன் = அழுக்கு மனம் கொண்ட அடியவன்

உடையாய்! = என்னை உடையவனே

உன் அடைக்கலமே = நான் உன் அடைக்கலம்

அகங்காரம் அறிவுக்குத் தடை.

அடைக்கலம், அகங்காரத்தை அழிக்கிறது.

எல்லாம் அற என்னை இழந்த நலம் என்றார் அருணகிரி.

இழந்து பாருங்கள். புதியதாய் ஏதாவது கிடைக்கும்.




No comments:

Post a Comment