Saturday, June 28, 2014

திருக்குறள் - அவர்கள் அறியாதது என் பாக்கியம்

திருக்குறள் - அவர்கள் அறியாதது என் பாக்கியம்

"நீயும் தான் அவள விடாம சுத்துறா , அவ உன்ன திரும்பிக் கூட பாக்க மாட்டேங்குறா...அவள விட்டுட்டு வேற வேலையைப் பார்ரா " என்று அவன் நண்பர்கள் அவனுக்கு அட்வைஸ் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

அவனுக்கோ அவளை விட மனமில்லை.

அவள் மேல் உயிரையே வைத்து இருக்கிறான்.

அவ அந்த பக்கம் இந்த பக்கம் வரும் போதும் போகும் போதும் , "மச்சி உன் ஆளு வர்றாடா " என்று நண்பர்கள் சொல்லும் போது சிலிர்த்துப் போவான்.

இப்படி, இவன் காதல் குறுகிய நண்பர்கள் வட்டத்தில் இருந்தது கொஞ்ச கொஞ்சமாக கசிந்து அவளின் தோழிகள் மத்தியிலும் பரவியது. "ஏண்டி , அவன் தான் கிடந்து இப்படி உருகுரான்ல ...சரின்னு சொல்ல வேண்டியது தானே ... உனக்கு என்ன அவ்வளவு ராங்கி " என்று அவளிடம் சொல்லத் தலைப் பட்டார்கள்.

இந்த விவகாரம் இவர்களின் வட்டத்தையும் தாண்டி இன்னும் வெளியில் செல்ல ஆரம்பித்து விட்டது.

இப்படி எல்லோரும் தன் காதலைப் பற்றிப் பேசுவது அவனுக்கு உள்ளுக்குள் ரொம்ப சந்தோஷம். இதனால், நாளடைவில் அவள் மனமும் இளகும் , தன் மேல் ஒரு கருணை பிறக்கும்,  அது அன்பாகக் கனியும், காதலாக மாறும்  என்று அவன்  நம்பத் தொடங்கினான்.

இப்படி ஊர் பேசுவதற்குப் பெயர் - அலர் தூற்றல் என்று பெயர்.

இப்படி, அந்த  ஊர், அவர்கள் அறியாமலேயே , அவனுடைய காதலுக்கு உதவி செய்தது. அது என் பாக்கியம் என்கிறான் அவன்.

பாடல்

அலரெழ வாருயிர் நிற்கு மதனைப் 
பலரறியார் பாக்கியத் தால்.

சீர் பிரித்த பின்

அலர் எழு ஆருயிர் நிற்கும் அதனை 
பலர் அறியார் பாக்கியத்தால் 

பொருள்

அலர் எழு  = காதலைப் பற்றி ஊர் பேசுவது

ஆருயிர் நிற்கும் = அதனால் என் காதல் பலப் பட்டு,  என் உயிர் என்னை விட்டு பிரியாமல் நிற்கும். இங்கே உயிர் என்பதை காதலி என்றும் கொள்ளலாம்...அல்லது காதல் கை கூட இருப்பதால் அவன் உயிர் அவனை விட்டு போகாமல் இருப்பதாகவும் கொள்ளல்லாம்.


அதனை = அதனை

பலர் அறியார் = பலர் அறிய மாட்டார்கள்

பாக்கியத்தால் = நான் செய்த புண்ணியத்தால்


1 comment:

  1. உன் முன்னுரை அமோகம்!

    ReplyDelete