Sunday, June 29, 2014

அச்சோ பத்து - சித்த மலம் அறுவித்து

அச்சோ பத்து - சித்த மலம் அறுவித்து


நாம் யாரோடு சேர்ந்து இருக்கிறோமோ அவர்களின் குணம், எண்ணம் போன்றவை நம்மை கட்டாயம் பாதிக்கும்.

நம் நண்பர்கள் எப்படிப்  பட்டவர்கள்?  நம் உறவினர்கள் எப்படிப  பட்டவர்கள் ? நம்மோடு வேலை செய்பவர்கள் எப்படிப் பட்டவர்கள் ?.... சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

முக்தி நெறியை அறியாத மூர்கர்களோடு சேர்ந்து  கொண்டு முக்தி அடைய வேண்டும் என்று  நினைத்தால் எப்படி நடக்கும் ?

மூர்க்கர் என்றால் பிடிவாதக்காரன் என்று அர்த்தம்.

மூர்கர்களோடு சேர்ந்து கொண்டு முக்தி நெறியில் செல்ல முடியுமா ?

அப்படி, கண்ட மூர்கர்களோடு  சேர்ந்த அலைந்த எனக்கும் பக்தி நெறியை காட்டி, என் பழைய வினைகள் அறுந்து போகும்படி செய்தாய்.

நம் மனம் எவ்வளவு குப்பைகளுக்கு இடமாக இருக்கிறது.

காமம், கோபம், பொறாமை, பேராசை, மதம், மாச்சரியம், ஆணவம்,  இப்படி ஆயிரம் குப்பைகள். கசடுகள். மலங்கள்.

இந்த மலங்களை நீக்கி....

நீக்கினால் என்ன ஆகும் ?

மலம் நீங்கினால் சீவன் சிவன் ஆகும்.

"சித்த மலம் தெளிவித்து சிவமாக்கி எனை ஆண்ட "

நீ எனக்கு அருள் செய்த மாதிரி வேறு யார் எனக்கு செய்வார்கள் என்று ஆச்சரியப் படுகிறார் மணிவாசகர்

பாடல்

முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை,
பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம்,
சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட
அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

பொருள்

முத்தி நெறி  = முக்தி அடையும் வழி

அறியாத = அறியாத

மூர்க்கரொடும் முயல்வேனை = மூர்கர்களோடு சேர்ந்து சேர்ந்து அலையும் என்னை


பத்தி நெறி அறிவித்து = பக்தி நெறி என்ன என்பதை நான் அறியும் படி செய்து

பழ வினைகள் பாறும்வண்ணம் = என் பழைய வினைகள் அழியும்படி

சித்த மலம் அறுவித்து = என் சித்தத்தின் மலங்களை நீக்கி

சிவம் ஆக்கி = என்னை சிவமாக்கி

எனை ஆண்ட = என்னை ஆட் கொண்ட

அத்தன் எனக்கு அருளிய ஆறு = அத்தன் எனக்கு அருள் செய்தவாறு

ஆர் பெறுவார்? அச்சோவே! = யார் பெறுவார்கள், அச்சோவே



No comments:

Post a Comment