Thursday, June 5, 2014

ஐந்திணை ஐம்பது - புலி நகம் போன்ற பூக்கள்

ஐந்திணை ஐம்பது - புலி நகம் போன்ற பூக்கள் 


பூ எவ்வளவு மென்மையானது.

இரத்தம் தோய்ந்த புலியின் நகம் எவ்வளவு கொடூரமானது.

அந்த நகத்தை முருக்கம் மரத்தின் பூவுக்கு உதாரணம் சொல்லி நம்மை அதிர வைக்கிறாள் தலைவி.

தலைவனை பிரிந்த பின் அவளுக்கு எல்லாமே துன்பம் தருவனவாக இருக்கிறது. பூ கூட புலி நகம் போல இருக்கிறது.

அதை விடுத்து வானத்தைப் பார்க்கிறாள் - ஒரு மேகம் கூட. குளிர் தரும் மேகம் ஒன்று கூட இல்லாமல் வானம் வறண்டு கிடக்கிறது.

சரி அதையும் விடுவோம்...இந்த இளவேனில் காலமாவது அவளுக்கு கொஞ்சம் இதம் தருகிறதா என்றால், அதுவும் இல்லை. இந்த இனிமையான இள வேனில் காலமும் அவளை வருத்துகிறது.

தலைவனின் பிரிவு அவளை அவ்வளவு வாட்டுகிறது.

அந்த பிரிவின்  சோகத்தை,துன்பத்தை சொல்லும் பாடல் .....

பாடல்

உதிரங் துவரிய வேங்கை யுகிர்போ
லெதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார் நீங்க - எதிருநர்க்
கின்பம் பயந்த விளவேனில் காண்டொறுந்
துன்பங் கலந்தழிவு நெஞ்சு.


பொருள்

உதிரங் துவரிய = உதிரம் துவரிய = இரத்தம் தோய்ந்த 

வேங்கை = புலியின்

யுகிர் = உகிர் = நகம்

போல் = போல

எதிரி = பருவத்தோடு ஒன்றிய  

முருக்கரும்ப = முருக்க மலர்கள் அரும்ப

ஈர் = ஈரமான

தண் = குளிர்ந்த

கார் = கார்மேகம். கரிய மேகல

 நீங்க = நீங்கிப் போக

எதிருநர்க் = காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் எதிரில் இருந்து

கின்பம் = இன்பம்

பயந்த = தந்த

விளவேனில் = இள வேனில்

காண்டொறுந் = பார்க்கும் போது  எல்லாம்

துன்பங் கலந்தழிவு நெஞ்சு = துன்பம் கலந்து அழிகின்றது என் மனம்.

அவளின் பிரிவுத் துயரம் நம்மை ஏதோ செய்கிற மாதிரி இல்ல ?


1 comment: