Monday, June 2, 2014

கலிங்கத்துப் பரணி - முத்தம் இட வந்தால், கண்ணில் நீரா?

கலிங்கத்துப் பரணி - முத்தம் இட வந்தால், கண்ணில் நீரா?


கண்ணில் நீர் துக்கத்தில் வரும்.

அளவு கடந்த இன்பத்திலும் வரும்.

அவள் முதலில் ஊடல் கொள்ள நினைக்கிறாள். முடியவில்லை. தன்னுடைய பொய் கோபத்தைக் கண்டு, அவளையும் தாண்டி, அவளுக்கு ஒரு புன்னகை பிறக்கிறது. ஆஹா, அவள் சிரித்து விட்டாள் என்று அவன், அவளை முத்தம் இட நெருங்குகிறான். என் மீது அவனுக்கு இவ்வளவு காதலா என்று அவள் மனத்திலும் அன்பு பெருக்கெடுக்கிறது, ஆனந்தம் பொங்குகிறது...அதனால் அவள் கண் ஓரம் இரண்டு கண்ணீர்த் துளிகள் முத்து போல உதிர்கின்றன.


பாடல்

முனிபவர் ஒத்திலராய் முறுவல்கி ளைத்தலுமே
     முகிழ்நகை பெற்றமெனா மகிழ்நர்ம ணித்துவர்வாய் 
கனிபவ ளத்தருகே வருதலும் முத்துதிரும் 
    கயல்களி ரண்டுடையீர் கடைதிற மின்திறமின்.


சீர் பிரித்த பின் 

முனிபவர் ஒத்து, இலராய்,  முறுவல் கிளைத்தலுமே
      முகிழ் நகை பெற்றமெனா மகிழ்நர் மணித்துவர் வாய் 
கனி பவளத்து அருகே வருதலும் முத்து உதிரும்  
    கயல்கள் இரண்டு உடையீர் கடை திறமின் திறமின்.


பொருள்


முனிபவர் = கோபம் கொள்பவர்களைப் போல

ஒத்திலராய் = ஒத்து + இலராய். முதலில் அப்படி ஒத்து  இருந்தாலும்,பின்னால் முடியாமல்

முறுவல் = புன்னகை 

கிளைத்தலுமே = புறப்பட்டதும்

முகிழ்நகை = மலர்கிண்ட புன்னகையைப்

பெற்றமெனா = பெற்றோம் என்று

மகிழ்நர் = மகிழும் காதலர்கள்

மணித்துவர்வாய் = அழகிய இதழ்களை

கனி = கனிந்த

பவளத்தருகே = பவளம் போன்ற இதழ்களின் அருகே

வருதலும் = வரும்போது

முத்துதிரும் = முத்து உதிரும்

கயல்களி ரண்டுடையீர் = கயல்கள் இரண்டு உடையீர். கயல் என்றால் மீன். முத்துப் போல நீர்த் துளிகள் தெறிக்கும் இரண்டு மீன் போன்ற கண்களை உடையவர்களே 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்றார்  வள்ளுவர். அன்பு மிகும் போது கண்ணீர் வரும்.

 கடைதிற மின்திறமின் = கதவைத் திறவுங்கள், திறவுங்கள்

அன்பையும், காதலையும், ஆனந்தத்தையும், அதில் விழையும் அன்யோன்யத்தையும்  இதைவிட அழகாகச் சொல்ல முடியுமா என்ன ?



1 comment:

  1. ஆகா, என்ன ஜொள்ளு, என்ன ஜொள்ளு! மனதிலிருந்து புன்முறுவலை வரவழைக்கும் பாடல் இது.

    ReplyDelete