Monday, June 2, 2014

தேவாரம் - அஞ்சினால் உய்க்கும் வண்ணம்

தேவாரம் - அஞ்சினால் உய்க்கும் வண்ணம்


 இந்த உடம்பு ஐந்து பூதங்களால் ஆனது.

இந்த உடம்பு ஐந்து புலன்களால் நடத்தபடுகிறது.

இந்த வாழ்க்கை நாளும் அச்சம் தருவதாய் இருக்கிறது. இன்று என்ன நேருமோ , நாளை என்ன நேருமோ என்று நாளும் அச்சம்தான்.

இப்படிப் பட்ட வாழ்க்கையில் இருந்து , திரு ஐந்து எழுத்தை ஒதி, அச்சத்தில் இருந்து விடுபட, பஞ்ச கவ்யம் என்று சொல்லப் படும் பசுவில் இருந்து வரும் ஐந்து பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அழகுடன் விளங்கும்  சிவனே என்று சிவனை நினைக்கும் போது, வாழ்வின் நிலையையும் எடுத்துச் சொல்கிறார் நாவுக்கரசர்.

பாடல் 


அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று, அதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப்பட்டு, இங்கு உழிதரும் ஆதனேனை,
அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்ந்தேன்
அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீரட்டனீரே! அம்மானே.


பொருள்

அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று = ஐந்து பூதங்களால் இயற்றப் பெற்ற உடலைப் பெற்று


அதனுள் வாழும் = அந்த உடம்பினுள் வாழும்

அஞ்சினால் = ஐந்து புலன்களால்

அடர்க்கப்பட்டு = வருத்தப் பட்டு

,இங்கு = இங்கு

உழிதரும் ஆதனேனை = உழலும் அறிவற்ற என்னை

அஞ்சினால் உய்க்கும் வண்ணம்  = திரு ஐந்து எழுத்தால் பிழைக்கும் வழியைக்

காட்டினாய்க்கு = காட்டினாய்

அச்சம் தீர்ந்தேன் = என் பயம் தீர்ந்தது

அஞ்சினால் = பஞ்ச கவ்யங்களால்

பொலிந்த சென்னி = அழகுடன் விளங்கும் தலையைக் கொண்ட

அதிகைவீரட்டனீரே! அம்மானே = திருஅதிகை என்ற திருத்தலத்தில் எழுந்து அருளி இருக்கும் என் அம்மானே



1 comment:

  1. அஞ்சினால் இயற்றப்பட்டு, அஞ்சினால் அடர்க்கப்பட்டு - நல்ல வரிகள்!

    நன்றி.

    ReplyDelete