Wednesday, June 11, 2014

அதிசயப் பத்து - பொய்யான மெய்

அதிசயப் பத்து - பொய்யான மெய்  


நீங்கள் இந்தப் ப்ளாகைப் படிப்பது எவ்வளவு பெரிய அதிசயம் !

உங்களைப் போல ஒருவர் உண்டாகி, வளர்ந்து, தமிழ் படித்து, இதில் ஆர்வம் கொண்டு, கணணி இயக்கி, இதைப் படிப்பது என்பது எவ்வளவு பெரிய அதிசயம்.

நாம் பிறந்து, வளர்ந்தது, படித்தது, உடல் நலக் குறைவு இல்லாமல் இருப்பது..இப்படி எத்தனையோ அதிசயங்களின் தொகுப்பு நாம்.

உங்கள் கட்டுப் பாடில் இல்லாமல், உங்களையும் மீறி இத்தனையும் நிகழ்ந்துள்ளது.

அதிசயம் தானே !

மாணிக்க வாசகர் இவற்றை கண்டு எல்லாம் அதிசயப் படுகிறார்.

இது எப்படி நிகழ்ந்தது. எனக்கு எப்படி இறைவன் அருள் கிடைத்தது என்று அதிசயித்து பாடிய பத்துப் பாடல்கள் அதிசயப் பத்து என்ற தொகுப்பு.

மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அவனின் ஆணவம்.

ஆணவத்தின் இரண்டு கூறுகள் - நான், எனது என்பன.

நான் யார் தெரியுமா - படித்தவன், பண்பாளன், தலைவன், பணக்காரன், அழகன், திறமை சாலி என்று ஆயிரம் வழிகளில் நம் ஆணவம் வலுப் பெறுகிறது.

அந்த நான் என்ற ஒன்றை மேலே கொண்டு செல்ல, மேலும் மேலும் கிடந்து உழல்கிறோம். மேலும் படிக்கிறோம், மேலும் சம்பாதிக்கிறோம், மேலும் இந்த உடலை அழகு செய்கிறோம்.

உடலுக்கு எதுவும் ஆகி விடுமோ என்று மரண பயம் வாட்டுகிறது.

இந்த உடல் மெய்யானதா ?

துளைகள் உள்ள மாமிசத்தால் ஆன சுவர் இது. புழுக்கள் நிறைந்தது. அழுக்கு நீர்கள் எப்போதும் வடியும் உடல். பொய்யான கூரை உடையது. இதை மெய்யானது என்று எண்ணி துன்பம் என்ற கடலில் கிடந்து உழல்வேனை, அவன் தன் அடியார்களோடு சேர்த்துக் கொண்டது எவ்வளவு பெரிய அதிசயம்.

பாடல்

பொத்தை ஊன் சுவர்; புழுப் பொதிந்து, உளுத்து, அசும்பு ஒழுகிய, பொய்க் கூரை;
இத்தை, மெய் எனக் கருதிநின்று, இடர்க் கடல் சுழித்தலைப் படுவேனை
முத்து, மா மணி, மாணிக்க, வயிரத்த, பவளத்தின், முழுச் சோதி,
அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!


பொருள்

பொத்தை ஊன் சுவர் = பொந்துகள், துளைகள் உள்ள மாமிசத்தால் ஆன சுவர்

புழுப் பொதிந்து = புழுக்கள் நிறைந்து

 உளுத்து = நாளும் அரிக்கப்பட்டு

அசும்பு ஒழுகிய = நிண நீர் ஒழுகும்

பொய்க் கூரை = பொய்யான கூரை கொண்டு  இருக்கும்

இத்தை = இதனை (இந்த உடலை)

மெய் எனக் கருதிநின்று, = உண்மை என்று நம்பி இருந்து

இடர்க் = துன்பம்

கடல் = கடல்

சுழித் = சுழலில் 

தலைப் படுவேனை = கிடந்து உழல்வேனை

முத்து = முத்து

 மா மணி = பெரிய மணி

மாணிக்க = மாணிக்கம்

வயிரத்த = வைரம்

பவளத்தின் = பவளம்

முழுச் சோதி = முழுமையான ஜோதி

அத்தன் = என் அத்தன்

ஆண்டு = என்னை ஆட்கொண்டு

 தன் அடியரில் = தன்னுடைய அடியவர்களில் ஒருவனாக

கூட்டிய அதிசயம் கண்டாமே!  = சேர்த்துக் கொண்ட அதிசயத்தை கண்டோமே



No comments:

Post a Comment