Sunday, June 22, 2014

மெய்யுணர்தல் - நரகம் புகினும் எள்ளேன்

மெய்யுணர்தல் - நரகம் புகினும் எள்ளேன் 


இந்த உலகில் வாழ்வதே எவ்வளவு சிக்கலாக இருக்கிறது ? எத்தனை பிரச்சனைகள் ? ஒரு நாள் போல் இன்னொரு நாள் இல்லை. ஒரு நாள் மகிழ்ச்சியாக இருக்கிறது...இன்னொரு நாள் துன்பம் வருகிறது.

மூப்பு கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறது ?

நோய் உள்ளுக்குள் காத்து இருக்கிறது.

மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் -  நமக்கு மட்டும் அல்ல, நம்மைச் சேர்ந்தவர்களுக்கும்.

இந்த உலக வாழ்வே இப்படி என்றால் நரக வாழ்வு எப்படி இருக்கும் ? நரகம் என்று ஒன்று இருக்கும் என்றால் அதைப் பற்றி கவலைப் படாமல் இருக்க முடியுமா ?

மாணிக்க வாசகர் சொல்கிறார்,

இறைவா, உன் திருவருள் இருக்கும் வரை, நரக வாழ்க்கை கிடைத்தாலும் கவலைப் பட மாட்டேன் என்கிறார்.

அவன் திருவருள் இருந்தால், நரக வாழ்கையே ஒரு பொருட்டு இல்லை என்றால், இந்த உலக வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு பெரிய சிக்கலாக இருக்காது.

உன் திருவருள் இருந்தால் போதும்....இந்திரன் பதவியும் பெரிதல்ல, நரக வாழ்வும் பெரிது அல்ல. சொர்கமும் நரகும் ஒரு பொருட்டே அல்ல என்கிறார். உன் அருள் ஒன்றே போதும் என்கிறார்.

பாடல்

கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும்,
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும்,
எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்; இறைவா!
உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!


பொருள்

கொள்ளேன் = ஏற்றுக் கொள்ள மாட்டேன்

புரந்தரன் = இந்திரன்

மால் = திருமால்

அயன் = பிரமன்

வாழ்வு = வாழ்வு. அவர்கள் பெற்ற வாழ்வு வேண்டாம்.

குடி கெடினும் = என் குடியே (குடும்பமே) கெட்டாலும்

நள்ளேன்  = மற்றவரோடு உறவு கொள்ள மாட்டேன்

நினது அடியாரொடு அல்லால் = உன் அடியார்களைத் தவிர

நரகம் புகினும் = நரக வாழ்வே கிடைக்கும் என்றாலும்

எள்ளேன் = அதற்காக வருத்தப் படமாட்டேன்

திரு அருளாலே இருக்கப் பெறின் = உன் திருவருள் இருக்கப் பெற்றால்

இறைவா! = இறைவா

உள்ளேன் பிற தெய்வம் = மற்ற தெய்வங்களை நினைக்க மாட்டேன்

உன்னை அல்லாது =உன்னைத் தவிர

எங்கள் உத்தமனே! = எங்கள் உத்தமனே



No comments:

Post a Comment