Tuesday, July 1, 2014

ஐந்திணை ஐம்பது - கூத்தாடி உண்ணினும் உண்

ஐந்திணை ஐம்பது  - கூத்தாடி உண்ணினும் உண்

சங்கப் பாடல்கள் என்றாலே ஏதோ காதல், பிரிவு, என்று மட்டும் தான் இருக்கும் என்று இல்லை.

கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் ஒரு சலிப்பினை, குடும்பத்தில் நடக்கும் ஒரு செய்தியை சொல்லுகிறது இந்தப் பாடல்.

அவள் நல்ல அழகி தான். அவனும் அவளும் திருமணம் செய்து கொண்டார்கள். வாழ்கை சொர்கமாக இருந்தது.

சிறிது காலம் கழித்து அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவளின் உடல் கட்டு தளர்ந்து போனது. அழகு குறைந்தது. அவனுக்கு அவள் மேல் இருந்த ஆர்வம் குறைந்தது. நாளடைவில் மற்ற பெண்கள் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்படத்  தொடங்கியது. சுகம் நாடி அந்தப் பெண்களின் பின்னால் போக ஆரம்பித்து விட்டான்.

அது அவளுக்குத் தெரிய வந்தது.

ஒரு நாள் அவனுடைய நண்பன் அவனைத் தேடி வீட்டுக்கு வந்தான்.

அவனிடம் வருந்தி , அந்த நண்பன் கூட தலைவனுக்கு நல்லது சொல்லி திருத்தவில்லையே என்ற கோபத்திலும் அவள் சொன்னாள்

"...என் கழுத்தைக் கட்டிக் கொள்ள மகன் பிறந்து விட்டான். அவன் என்னிடம் பால் குடிக்கிறான். எனக்கு வயதாகி விட்டது. நல்ல கட்டு கோப்பாக உள்ள  அந்த மாதிரி பெண்கள் உள்ள இடங்களுக்கு அவன் போய் தண்ணி அடிக்க ஆரம்பித்து விட்டான். அவனிடம் போய் சொல். இல்லை என்றால் நீயும் அங்கே போய் கூத்தடி ...இங்கே வராதே "

என்று கதவை தாழிட்டாள்

பாடல்

போத்தில் கழுத்திற் புதல்வ ணுணச்சான்றான்
மூத்தே மினியாம் வருமுலையார் சேரியு
ணீத்துநீ ரூனவாய்ப் பாண!நீ போய்மொழி
கூத்தாடி யுண்ணினு முண்.

சீர் பிரித்த பின்

போத்தில் கழுத்தில் புதல்வன் உண்ணச் சான்றான் 
மூத்தேம் இனி யாம் வரு முலையார் சேரியில் 
நீ நீத்து நீர் ஊன் வாய் பாண ! நீ போய் மொழி 
கூத்தாடி உண்ணினும் உண் 

பொருள்

போத்தில் = பொழுது இல்லை

கழுத்தில் = கழுத்தில்...என்னை கழுத்தோடு கட்டிக் கொள்ள பொழுது இல்லை

புதல்வன் = மகன்

உண்ணச் = முலை உண்ணத்

சான்றான் = தொடங்கி விட்டான்

மூத்தேம் இனி யாம் = வயதாகி விட்டது எனக்கு

வரு முலையார் = வளருகின்ற இளமையான முலையை உடைய பெண்கள் உள்ள

சேரியில் = சேரியில்

நீ = நீ

நீர் = கள் குடித்து

 ஊன் வாய் = ஊன் (மாமிசம் ) உண்டு

பாண ! = பாணனே

நீ போய் மொழி = நீ போய் சொல்லு. இல்லை, உன்னை நம்ப முடியாது . அங்க போனவுடன் எல்லாவற்றையும் மறந்து விட்டு, நீயும் அந்த பெண்கள் பின்னால் போய் விடுவாய்


கூத்தாடி உண்ணினும் உண் = சொன்னா சொல்லு, இல்லேன்னா அங்கேயே போய் கூத்தடி

பெண்ணின் இயலாமை ... பிள்ளை பெற்ற பின் இளமை அழிவதனால் வரும் சோகம், கணவன் தன் மேல் அன்போடு இல்லையே என்ற ஏக்கம்....பாணன் மேல் வரும் கோபம், அழகான அந்த மாதிரி பெண்களின் மேல் பொறாமை என்று அனைத்தும் கலந்த உணர்ச்சி குவியலான பாடல்


ஆண்கள் அந்த காலத்திலும் அப்படித்  தான் இருந்திருக்கிறார்கள்.

பெண்கள் சகித்திருக்கிரார்கள்




1 comment:

  1. அருமையான பாடல். அந்தப் பெண்ணை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete