Wednesday, July 2, 2014

இன்னிலை - அறம் கேட்ட பேய்

இன்னிலை - அறம் கேட்ட பேய் 


பாரதப் போரின் தொடக்கத்தில் கண்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்தான். அதை அங்கிருந்த பேய் ஒன்று கேட்டுக் கொண்டிருந்தது. கீதையை கேட்ட பேய் அதனால் பயன் பட்டு உயர் நிலை அடைந்தது என்று ஒரு கதை உண்டு.

கீதை பேய்க்கு சொன்னதில்லை. இருந்தும், யாருக்கோ சொன்ன அற உரைகளை கேட்டு பேய் உயர்வடைந்தைப் போல நீங்களும் அற நூல்களைப் படித்து பயன்  பெறுங்கள்.

பாடல்

அன்றமரிற் சொற்ற வறவுரைவீழ் தீக்கழுது
மன்று யர்ந்து போந்த வகைதேர்மின்-பொன்றா
அறமறிந்தோன் கண்ட வறம்பொருள்கேட் டல்லன்
மறமொறுக்க வாய்த்த வழக்கு.

சீர் பிரித்த பின்

அன்று அமரில் சொன்ன அற  உரை வீழ் தீக்கழுது
மன்று உயர்ந்து போந்த வகை தேர்மின்-பொன்றா
அறம் அறிந்தோன் கண்ட வறம் பொருள் கேட்டல்லன்
மறம் ஒறுக்க வாய்த்த வழக்கு.


பொருள்

அன்று = அன்று, பாரதப் போர் நடந்த அன்று

அமரில் = போரில்

சொன்ன அற  உரை = சொல்லப்பட்ட அற உரைகளை (கீதையை)

வீழ் தீக்கழுது = கேட்ட பேயானது

மன்று உயர்ந்து போந்த வகை = மன்று என்றால் மன்றம். உயர்ந்தவர்கள் வாழும் இடம். சொர்க்கம். பேய் சொர்க்கம் போன வகை.

தேர்மின் = ஆராய்ந்து அறியுங்கள்.

பொன்றா = குறையாத

அறம் அறிந்தோன் = அறத்தினை அறிந்தவன் ( பெரியவர்கள்,)

கண்ட வறம் பொருள் கேட்டல்லன் = கண்டு சொன்ன அறத்தின் பொருளை கேட்டு அறிந்து , துன்பம் நீங்கி

மறம் ஒறுக்க வாய்த்த வழக்கு = அறம் அல்லாத (மறம் ) வாழ்கையை ஒறுத்து (வெறுத்து ஒதுக்கி)  வாழும் வகையை கடை பிடிக்க வேண்டும்.


ஒரு பேய் அறம் கேட்டு  உய்யும் என்றால் நாம் எந்த விதத்தில் அந்த பேயைவிட தாழ்ந்து போனோம் ? நாமும் அற நூல்களை படித்து பயன் பெறலாம் - பயன் பெற வேண்டும்.

அறம் அறம் என்று நம் இலக்கியங்கள் அரற்றுகின்றன.

எங்கு சென்றாலும், எந்த  இலக்கியத்தை பிரித்தாலும்  அறத்தின் சாயலை பார்க்கலாம்.

நம் இலக்கியங்கள் அறத்தை மிக வலியுறுத்துகின்றன.

சில தலைமுறைகள் அறம் என்றால் என்ன என்றே தெரியாமல் வாழ்ந்து  வருகின்றன.

இலக்கியங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இளம் வயதில் அறத்தினை மனதில் ஏற்றி விட்டால் பின் அது மாறாது.

கொஞ்சம் வளர்ந்த பின் கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்கள். அதற்கு முன் அறத்தை போதிக்க வேண்டும்  குழந்தைகளுக்கு.

அறம் செய்ய விரும்பு என்று ஆரம்பித்தாள் ஔவை.

இவற்றை எப்படியாவது இந்தத் தலை முறைக்கு சொல்லித் தரவேண்டும்.

ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் விருப்பம்.







No comments:

Post a Comment