Wednesday, July 23, 2014

கந்த புராணம் - படை வீரர்களின் மனம்

கந்த புராணம் - படை வீரர்களின் மனம்


படை வீரர்கள் எதிரிகளை கொல்ல வேண்டும், அழிக்க வேண்டும், அவர்கள் கை கால்களை வெட்ட வேண்டும் என்று வெறியோடு செயல்படுவார்கள். அவர்களிடம் அன்பையும், நேசத்தையும் எதிர் பார்க்க முடியாது. "ஐயோ, ஒரு உயிரை கொல்கிறோமே, அந்த உயிருக்கு எப்படி வலிக்கும் " என்ற பச்சாதாபம் இருக்காது.

அதிலும் அரக்கர் படை என்றால் எப்படி இருக்கும்.

இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

பொருளுக்காக தங்கள் உடலை விற்கும் விலை மாதர்களின் மனம் போல அன்பும், அருளும், கருணையும் அற்று இருந்தது அந்த படை வீரர்களின் மனம் என்றார்.

விலை மகளிர் தங்கள் மேல் அன்பாக  இருப்பார்கள் என்று நினைப்பவர்களை சிந்திக்க வைக்கிறார் கச்சியப்பர். கொலையில் கொடியாரைப் போன்றது விலைமகளிர் மனம்.

பாடல்


வஞ்சம் நீடி அருள் அற்று மாயமே
எஞ்சல் இன்றி இருள் கெழு வண்ணமாய்
விஞ்சு தம் அல்குல் விற்று உணும் மங்கையர்
நெஞ்சம் ஒத்தனர் நீள் படை வீரரே.

பொருள்

வஞ்சம் நீடி = நீண்ட வஞ்சனையை கொண்டு

அருள் அற்று = அருள் எதுவும் இன்றி

மாயமே = மாயங்களை

எஞ்சல் இன்றி = எதுவும் மிச்சம் இல்லாமல்

இருள் கெழு வண்ணமாய் = எங்கும் இருள் சூழும் வண்ணம்

விஞ்சு = பெருத்த (விஞ்சிய)

தம் = தங்களுடைய

அல்குல் விற்று = உடலை விற்று

உணும் மங்கையர் = உண்ணும், அல்லது பொருள் பெறும்

நெஞ்சம் ஒத்தனர் = மனதை ஒத்து இருந்தனர்

நீள் படை வீரரே = பெரிய படையின் வீரர்கள் (சூரபத்மனின் படை வீரர்கள்)

படை வீரர்கள் இறுதியில் தங்கள் எதிரிகளை கொல்லுவார்கள். விலை மாதரும் அப்படித்தான் என்று சொல்லாமல் சொல்கிறார் கச்சியப்பர்.

இலக்கியம் படிப்பதில், மனித மனதின் உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம்.




1 comment: