Thursday, July 3, 2014

இராமாயணம் - கவந்தன் - ஒரு அறிமுகம்

இராமாயணம் - கவந்தன் - ஒரு அறிமுகம் 


கவந்தன் வதைப் படலம் பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

காப்பியத்தில் ஒவ்வொரு கதா பாத்திரமும் ஏதோ ஒன்றை சொல்லி நிற்கின்றன.

பொதுவாகவே அரக்கர்கள் அழிக்கப் படும்போது நிகழ்வது என்ன என்றால், அவர்கள் தங்கள் சாபம் தீர்ந்து, அழித்த அந்த பரம் பொருளை வணங்கி விண்ணுலகு செல்வார்கள்.

என்ன அர்த்தம்?

எல்லா மனிதர்களுக்குள்ளும் அரக்க குணம் நிரம்பிக் கிடக்கிறது. அந்த அரக்க குணம் தலை விரித்து ஆடுகிறது...காமம், குரோதம், மதம், மாச்சரியம், பொறாமை, பேராசை என்ற பல அரக்க குணங்கள், அசுர குணங்கள் தலை விரித்து ஆடுகின்றது.

நான் என்ற அந்த உடல் அழியும் போது அவர்களின் உண்மையான தெய்வ வடிவம்  பெறுகிறார்கள்.

அரக்கர்கள் என்றால் ஏதோ  கருப்பா,குண்டா , பெருசா இருப்பார்கள் என்று நினைக்கக்  கூடாது.

நாம் தான்  அரக்கர்கள்.

நமக்குள் இருப்பதுதான் அரக்க குணம்.

கவந்தன் என்று ஒரு  அரக்கன்.  அவனிடம் உள்ள கெட்ட குணம் அளவுக்கு அதிகமாக உண்பது. அளவுக்கு அதிகமான எதுவும் அரக்க குணம்தான்.

இராவணனுக்கு காமம் தலைக்கு  ஏறியது.

கவந்தனுக்கு உணவு மேல்  ஆசை.பெருந்தீனி  உண்பவன்.

வாயில் போட்டு, அரைத்து உண்டு, அது வயிற்றிற்கு போவது கூட அதிக நேரம் ஆகும் என்று, அவனுக்கு வாய் வயிற்றிலேயே இருக்குமாம்.

வயிற்றிடை வாயன் என்று பெயர்.

உணவை எடுத்து அப்படியே வயிற்றிலேயே போட்டுக் கொள்வான். வாய் தான்  வயிற்றில் இருக்கிறதே.

அதிமான உணவு உண்டதால் உடல் பெருத்து, புத்தி மழுங்கி பலப் பல தீய செயல்களை  செய்கிறான். வரும் நாட்களில் அவனைப் பற்றி அறிவோம்.

காப்பியங்கள் நிகழ்வுகளை கொஞ்சம் மிகைப் படுத்தி சொல்லும். நிகழ்வுகளுக்கு பின் இருக்கும்  செய்தியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கொட்டிக் கிடக்கிறது புதையல். வேண்டுமட்டும் அள்ளிக் கொள்வோம்.


1 comment: