Friday, July 4, 2014

இராமாயணம் - நிலமகள் பொறுமை இல்லாதவள்

இராமாயணம் - நிலமகள் பொறுமை இல்லாதவள் 


பொறுமை.

பொறுமை என்றால் பொறுத்தல். மற்றவர்கள் செய்யும் பிழைகளை பொறுத்துக் கொள்ளுதல்.

ஏன் பொறுக்க வேண்டும் ? எனக்கு என்ன தலை எழுத்தா அவனவன் செய்கின்ற பிழைகளை பொறுக்க ? அததுக்கு அப்பப்ப குடுத்தா தான் எல்லோரும் ஒழுங்காக இருப்பார்கள் என்று நாம் எண்ணுவோம்.

அப்படி அல்ல.

பொறுமைக்கு என்று ஒரு அதிகாரமே வைத்து இருக்கிறார் வள்ளுவர் - அறத்துப் பாலில்.

கணவனோ, மனைவியோ, நண்பர்களோ, பிள்ளைகளோ, உறவினரோ, அலுவகலத்தில் யாருமோ ஏதோ பிழை செய்யல்லாம். பொறுமையாக இருந்தால் அதன் பலன் மிகப் பெரியது என்கிறார் வள்ளுவர்.

நல்ல குணங்களை நல்ல பாத்திரங்களின் மேல் ஏற்று சொல்லுவது இலக்கிய மரபு.

சீதை, பொறுமையின் சிகரம்.

பொறுமைக்கு உதாரணம் என்றால் நிலமகளை சொல்லுவது வழக்கம்.

அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வார் பொருத்தல் தலை என்பார் வள்ளுவர்.

ஆனால், "இது எல்லாம் ஒரு பொறுமையா ...இதெல்லாம் ஒரு பொறுமையே இல்லை " என்று சொல்லும் அளவுக்கு பொறுமை வாய்ந்தவள் சீதை.  சீதையின் பொறுமையின் முன்னால் நில மகளின் பொறுமை ஒன்றும் இல்லையாம்.


விடிகாலை.

பறைவகள் எல்லாம் கூட்டை விட்டு இரை தேடி கிளம்பி விட்டன.

அவை அங்கும் இங்கும் அலைகின்றன.

அதை பார்த்த இராமனுக்கு, அந்த பறவைகள் சீதையை காணாமல் தான் அங்கும் இங்கும் அலைவதைப் போல தோன்றியதாம்.


பாடல்

நிலம் ‘பொறை இலது ! ‘என நிமிர்ந்த கற்பினாள்
நலம் பொறை கூர்தரு மயிலை நாடிய
அலம்புறு பறவையும் அழுவவாம் எனப்
புலம்புறு விடியலில் கடிது போயினார்.

பொருள்

நிலம் ‘பொறை இலது ! ‘என = நிலமகள் பொறுமை இல்லாதவள் என்று கூறும் அளவுக்கு பொறுமை உள்ள சீதை

நிமிர்ந்த கற்பினாள் = உயர்ந்த கற்புள்ளவள்

நலம் =நலத்தை தரும்

பொறை கூர்தரு = பொறுமையை கைக் கொண்ட

 மயிலை நாடிய = மயில் போன்ற சீதையைத் தேடி

அலம்புறு = அங்கும் இங்கும் அலையும்

பறவையும் = பறவைகளும்

அழுவவாம் எனப் = அழுதன என்று

புலம்புறு விடியலில் = புலம்பும் விடியலில்

கடிது போயினார். = விரைந்து போனார்கள் (இராமனும் இலக்குவனும் )


No comments:

Post a Comment