Thursday, July 24, 2014

ஐந்திணை ஐம்பது - போயின சில் நாள்

ஐந்திணை ஐம்பது - போயின சில் நாள் 


தோழி: ஏண்டி, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே தனியாக பார்ப்பதும், சிரிப்பதும் இருப்பதும்....உங்க கல்யாணம் பத்தி அவன் கிட்ட பேசுனியா ?

அவள்: ம்ம்ம்...இல்லடி...இனிமே தான் பேசணும்....

தோழி: ஏன் இன்னும் பேசாம இருக்க ?

அவள்: அவனே இந்த பேச்சை எடுப்பான்னு இருக்கேன்....

தோழி: உனக்கு இந்த ஆம்பிளைங்கள தெரியாது...இதை எல்லாம் பத்தி அவங்க யோசிக்கிறது கிடையாது...

அவள்: நானே எப்படிடி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு கேக்குறது ?

தோழி: ஐயோடா...இதுக்கு மட்டும் வெக்கமாக்கும்...இங்க பாரு, இன்னிக்கு கட்டாயம் இந்த பேச்சை எடு...காலா காலத்தில கல்யாணம் பண்ற வழியப் பாரு...என்ன சரிதான ? சரி சரின்னு இங்க மண்டைய ஆட்டு ...அங்க போய் ஒண்ணும் சொல்லாத  என்ன....

அவள்: புன்முறுவல் பூத்தாள் .....

பாடல்

பொன் இணர் வேங்கை கவினிய பூம் பொழிலுள்
நன் மலை நாடன் நலம் புனைய,-மென்முலையாய்!-
போயின, சில் நாள் புனத்து மறையினால்
ஏயினர் இன்றி, இனிது.

பொருள்

பொன் இணர் = பொன் போன்ற நிறம் கொண்ட

வேங்கை = வேங்கை மரங்கள் நிறைந்த

கவினிய = அழகான

பூம் பொழிலுள் = பூஞ்சோலையில்

நன் மலை நாடன் = மலை நாட்டில் உள்ள அந்த நல்லவன் (தலைவன்)

நலம் புனைய = உன்னுடைய நலன்களை இரசிக்க, பாராட்ட

மென்முலையாய்!- = மென்மையான முலைகளை கொண்டவளே

போயின, சில் நாள் = சில நாட்கள் போய் விட்டன

 புனத்து மறையினால் = புன்னை மரங்களின் மறைவில்

ஏயினர் இன்றி = தடை சொல்பவர் யாரும் இன்றி. யாரும் பார்க்காமல்

இனிது = இனிமையாக.


அதாவது கொஞ்ச நாள் நீங்கள் தனிமையில் சந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதுவும் நாட்கள் இனிமையாகப்  போகின்றன. ஏதாவது தப்பு  தண்டா  நடந்து இருக்கப் போகுது என்று தோழி கவலைப்  படுகிறாள்.

"உன் நலம் புனைந்து" உன் அழகை இரசித்து

"ஏயினர் இன்றி" = தடுப்பவர்கள் யாரும் இன்றி, தடை இன்றி

 "போயின சில் நாள் , இனிது" = சில நாட்கள் இனிமையாகப் போயின

"மென் முலையாய்" = மென்மையான முலைகளை கொண்டவளே

என்று சொல்வதின் மூலம் இலை மறை காயாக சொல்ல வேண்டியதை சொல்லி  விடுகிறாள் தோழி.

அவள் சொல்லாமல் விட்டதுதான் இந்த கவிதையின் சுவையான பகுதி.

எழுதாத கவிதை அது



1 comment:

  1. அருமையான கவிதை! தப்புத் தண்டா செய்து விடாதே என்று எவ்வளவு நாசூக்காகத் தோழி சொல்கிறாள்! அது என்ன புன்னை மரத்துக்குப் பின்னால் "நலம் புனைவது"?!? சூப்பர் கவிதை!

    ReplyDelete