Monday, August 25, 2014

சிவ புராணம் - பொய்யாயின போய் அகல வந்து அருளி - பாகம் 1

சிவ புராணம் - பொய்யாயின  போய் அகல வந்து அருளி - பாகம் 1




பாடல்

வெய்யாய் தணியாய், இயமானனாம் விமலா
பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன், இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை, அகல்விக்கும் நல்லறிவே

வெப்பமாய் இருப்பவனே. குளிர்ச்சியாய் இருப்பவனே. நியமங்கள் என்ற மலம் (அழுக்கு, குற்றம்) இல்லாதவனே. என்னை விட்டு பொய்யாயின போய் விட அருள்  .செய்தவனே.  எனக்கு ஒரு ஞானமும் இல்லாத எனக்கு அஞ்ஞானத்தை போக்கி நல்ல அறிவை கொடுத்தவனே


பொருள்

வெய்யாய் = வெப்பமானவனே
தணியாய் = குளிர்சியாணவனே
இயமானனாம் = இதற்கு ஆத்மாவாக  நின்றவனே,நியமங்களாக  இருப்பவனே என்று பொருள் சொல்கிறார்கள்

விமலா = குற்றம் அற்றவனே

பொய்யாயின எல்லாம் = பொய்யாயினவெல்லாம்

போயகல வந்தருளி = அகன்று போய் விட வந்து அருள் செய்தவனே

மெய்ஞ்ஞானம் ஆகி = உண்மையான ஞானம் ஆக நின்று

மிளிர்கின்ற மெய்ச்சுடரே= ஒளி வீசும் உண்மையான சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் = எந்தவித ஞானமும் இல்லாதவன் நான்

இன்பப் பெருமானே = இன்பத்தின் உறைவிடமாய் இருப்பவனே

அஞ்ஞானம் தன்னை,  = அறியாமையை

அகல்விக்கும் நல்லறிவே = அகற்றிடும் நல் அறிவே


என்று மாணிக்க வாசகர் இறைவனை  புகழ்கிறார்.

மேலோட்டமான அர்த்தம் அவ்வளவுதான்.

சற்று ஆழமாக சிந்தித்தால்....


பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி

அது என்ன போய் அகல ? போய் என்றாலே அகல்வது தானே. gate கதவு, நடு center , மாதிரி போய் அகல ?

ஆசையினால் துன்பம் வருகிறது என்று தெரிகிறது. அதை விட்டு விட வேண்டும் என்றும் தோன்றுகிறது. பல சமயங்களில் விட்டும் விடுகிறோம்.  உடல் விட்டாலும் மனம் விட மாட்டேன் என்று அடம்  பிடிக்கிறது.

இனிப்பு கெடுதல் என்று அறிவுக்குத் தெரிகிறது. விட்டும் விடுகிறோம். இருந்தாலும் மனம் விடுகிறதா ? இனிப்புப் பொருள்களை கண்டால் ஜொள்ளு விடுகிறது.

அறிவும் விட வேண்டும், மனமும் விட வேண்டும்.

முதலில் அறிவை விட்டு போக வேண்டும் பின் மனதை விட்டுப் போக வேண்டும்.

இதைத்தான் வள்ளுவரும்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

யாதனின் யாதனின் என்று இரண்டு முறையும்
அதனின் அதனின் என்று இரண்டு முறையும் சொல்கிறார்.

யாதனின் நீங்கியான் நோதல் அதனின் இலன் என்று சொல்லி இருக்கலாம்.

மனமும் நீங்க வேண்டும். அறிவும் நீங்க வேண்டும்.

போய் அகல என்றால் புரிகிறது.

ஆனால் இந்த பொய்யாயின எல்லாம் என்று சொல்கிறாரே...அது என்ன பொய்யாயின ?

எது பொய் எது உண்மை என்று எப்படி அறிந்து கொள்வது ? ஏதாவது புத்தகத்தில் இருக்கிறதா?  யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளலாமா ?

அதையும் அவரே சொல்கிறார்

மேலும் சிந்திப்போம்


1 comment: