Sunday, August 24, 2014

இராமாயணம் - இராவணன் - சீதை உரையாடல் - பாகம் 2

இராமாயணம் - இராவணன் - சீதை உரையாடல் - பாகம் 2


அசோகவனத்தில் சீதையிடம் ஜொள்ளுகிறான் இராவணன்.

"நான் வஞ்ச மனம் கொண்டவன். பெண் போல வடிவுகொண்ட நஞ்சு தோய்ந்த அமுதத்தை உண்ண விரும்பினேன். உன்னை நாளும் உன் நினைவால் என் நெஞ்சு நொந்து தேய்ந்து போகிறது. சரி,இந்த துன்பத்தை தாங்க முடியாமல் உயிரை விட்டு விடலாமா என்றால் அதற்கும் பயமாக இருக்கிறது. அடியவனான நான் உன் அடைக்கலம்.  அமுதின் வந்தீர்"

என்று புலம்புகிறான்.

நாயேன், அடியேன் என்று தன்னுடைய அத்தனை பெருமைகளையும் விட்டு விட்டு மிக மிக கீழிறங்கி வருகிறான்.

பாடல்

 வஞ்சனேன் எனக்கு நானே,
    மாதரார் வடிவு கொண்ட
நஞ்சுதோய் அமுதம் உண்பான்
    நச்சினேன்; நாளும் தேய்ந்த;
நெஞ்சு நொந்து உம்மை நாயேன்
    நினைப்பு விட்டு, ஆவி நீக்க
அஞ்சினேன்; அடியனேன் நும்
    அடைக்கலம், அமுதின் வந்தீர்!

பொருள் 

 வஞ்சனேன் எனக்கு நானே = எனக்கு நானே வஞ்சனை செய்து கொள்கிறேன்

மாதரார் வடிவு கொண்ட = பெண் என்ற வடிவு கொண்ட

நஞ்சுதோய் அமுதம் = நஞ்சு தோய்ந்த அமுதத்தை

உண்பான் நச்சினேன் = உண்ண விரும்பினேன்

நாளும் தேய்ந்த = தினமும் தேய்ந்த

நெஞ்சு நொந்து = என் நெஞ்சம் நொந்து

உம்மை = உன்னை, உங்களை

நாயேன் = நாய் போன்றவனான நான்

நினைப்பு விட்டு, = நினைப்பு விட்டு

ஆவி நீக்க அஞ்சினேன்; = உயிரை விட அஞ்சினேன்

அடியனேன் நும் அடைக்கலம் = அடியேன் உங்கள் அடைக்கலம்

அமுதின் வந்தீர்! = அமுதத்தில் இருந்து வந்தவளே

இதில் சில வார்த்தைகளைப் பார்ப்போம்.

நச்சினேன் . நச்சினேன் என்றால் விரும்பினேன். சிவனின் திருநாமங்களில் நச்சினார்க்கினியன் என்பதும் ஒன்று. விரும்பியவர்களுக்கு இனியவன்.

வேண்டிய ஒன்றை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு பெயர் நச்சரித்தல் (nagging ) என்று பெயர்.

நச்சு என்பது இரண்டு விதத்தில் பொருள் தருகிறது.

வினை வடிவில் அது விரும்புதல் என்ற பொருளைத் தருகிறது.

அதுவே பெயர் சொல்லாக வரும்போது "நஞ்சு" என்ற பொருளில் வருகிறது.

முதல் வரியில் நஞ்சு தோய்ந்த அமுதம் என்று வந்தது. அதை தொடர்ந்து நச்சினேன் என்ற தொடர் மிகப் பொருத்தமாக இருக்கிறது.

நச்சினேன் என்றால் விரும்பினேன்.

விரும்பும்படி இருந்தால் "நச்" சென்று இருக்கிறது என்று சொல்லுவார்கள்.

விரும்பும் படி இருப்பவர் - நச்சியார் அல்லது ஆதி நீண்டு நாச்சியார்.

"அமுதின் வந்தீர்" என்று தெரிந்து சொன்னானா அல்லது தெரியாமல் சொன்னானா என்று தெரியவில்லை. திருமகள் , அமுதத்தோடு சேர்ந்து பாற்கடலில் இருந்து தோன்றியவள். சீதை, திருமகளின் அவதாரம்.

உன் நினைப்பை விட்டால் இறந்து போவேன். இறப்பதற்கும் அச்சமாக இருக்கிறது.

காதல் படுத்தும் பாடு !







1 comment:

  1. நச்சு என்பதற்கு இவ்வளவு வார்த்தைகளா?!

    அருமையான பாடல். இராவணன் எப்படிக் கெஞ்சுகிறான்!

    ReplyDelete