Saturday, August 30, 2014

இராமாயணம் - இராவணன் சீதை உரையாடல் - பாகம் 4

இராமாயணம் - இராவணன் சீதை உரையாடல் - பாகம் 4


அசோகவனத்தில் சிறை இருந்து சீதையிடம் இராவணன் பேசுகிறான்.

"ஈசன் முதல் மானிடர் வரை அனைவரும் அஞ்சும்படி மூன்று உலகும் கட்டி காக்கும் என்னை, வீரர்கள் வரிசையில் உள்ள ஒருவர்க்கும் நான் தோற்றது இல்லை. ஆனால், இன்று ஒரு பெண்ணிடம் வைத்த ஆசை நோய் என்னை கொன்று விட்டது என்று சொன்னால், என் ஆண்மை மாசு அடையாதோ ?"

பாடல்

ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆகக்
கூச, மூன்று உலகும் காக்கும் கொற்றத்தென்; வீரக் கோட்டி
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென்; பெண்பால்
                                        வைத்த
ஆசை நோய் கொன்றது என்றால், ஆண்மைதான்
                                    மாசுணாதோ?

பொருள்

ஈசனே = ஈசன்

முதலா = முதல்

மற்றை மானிடர் இறுதி ஆகக் = மனிதர்கள் வரை

கூச = அஞ்சிக் கூசும்படி

மூன்று உலகும் காக்கும் = மூன்று உலகையும் காக்கும்

கொற்றத்தென் = என் அரசின்

வீரக் கோட்டி = வீரர்கள் கோட்டில், வீரர்கள் வரிசையில் 

பேசுவார் ஒருவர்க்கு = பேசப்படும் ஒருவர்க்கும்

ஆவி தோற்றிலென் = ஆவி தோற்றது இல்லை

பெண்பால் வைத்த = பெண் மேல் வைத்த

ஆசை நோய் கொன்றது என்றால் =ஆசை நோய் கொன்றது என்றால்

ஆண்மைதான் மாசுணாதோ? = என் ஆண்மை மாசு அடையாதா ?

ஆசை என்பது நோய். அந்த நோய்க்கு மருந்து இதுவரை கண்டு பிடிக்கவில்லை. மருந்து இல்லாத நோய் வந்தால் மரணம் ஒன்று ஒன்றுதான் முடிவு.

பேராசை எனும் நோயில் (பிணி) கட்டப்பட்டு (பிணிபட்டு ) என்பார் அருணகிரிநாதர்.

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே.


துன்பம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஆசை வேண்டாம் என்று இருக்க வேண்டும். ஆசை இருந்தால் அதன் மூலம் மேலும் மேலும் துன்பம் வந்து கொண்டே இருக்கும் என்பார்  வள்ளுவர்.

அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்; அஃது உண்டேல்,
தவாஅது மேன்மேல் வரும்.

ஒரு பக்கம் ஆசை என்னும் நோய். 

இன்னொரு பக்கம் ஆணவம் - ஈசன் முதல் மனிதர் வரை எல்லோரும் அஞ்சும்படி  மூவுலகையும் ஆண்டேன் என்ற ஆணவம். 

இன்னொரு பக்கம் பயம் - புகழுக்கு பங்கம் வந்து விடுமோ, உயிர் போய் விடுமோ என்ற பயம்.

ஆண்மை என்பது மூன்று உலகையும் ஆள்வது  என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். 

பிறன் மனை நோக்காதது பேராண்மை என்று அவன் அறியவில்லை. 

இராவணனுக்கு வந்ததை கம்பர் நமக்குக்  காட்டுகிறார். ஆழ்ந்து சிந்தித்தால் வாழ்வின்  தத்துவங்கள் விளங்கும். 

விளங்கிக் கொள்வோம். 




1 comment:

  1. "பெண் மேல் வைத்த ஆசை என்னைக் கொன்று விட்டது என்று பிறர் சிரிக்கும் வண்ணம் வைத்து விடாதே; என் ஆசைக்கு இணங்கி விடு" என்கிறான்! என்ன ஒரு திகிரியான வாதம்!

    ReplyDelete