Friday, August 1, 2014

கம்ப இராமாயணம் - நினைத்ததை முடிப்பவன்

கம்ப இராமாயணம் - நினைத்ததை முடிப்பவன் 



ஒரு   முறை ஒரு பெரிய பணக்காரன் ஒரு ஜென் துறவியைப் கண்டு ஆசி வாங்கப் போனான். துறவிக்கு நிறைய பொருள் கொடுத்து என்னை ஆசீர்வதியுங்கள் என்றான்.

உடனே அந்தத் துறவி "முதலில் நீ சாவாய் . பின் உன் மகன் சாவான். பின் உன் பேரன் சாவான் " என்று ஆசி  வழங்கினார்.

அந்த செல்வந்தனுக்கு பெரிய ஏமாற்றமும் கோபமும்.

"என்ன துறவியாரே , ஆசி வழங்கச் சொன்னால் இப்படி சாகும் படி சொல்கிறீர்களே " என்றான்.

அதற்கு அந்த துறவி சொன்னார் "யோசித்துப் பார் , முதலில் உன் பேரன் இறந்து, பின் உன் மகன் இறந்து, பின் நீ இறந்தால்  எப்படி இருக்கும்....அந்த சோகத்தை உன்னால் தாங்க முடியுமா ? "  என்றார்.

சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம்.

தனக்கு மரணமே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த இராவணன் மரணத்தின் வலி என்றால் என்ன என்று உணரும் தருணம். 

இந்திரசித்து மாண்டு போனான். இராவணன் போர் களத்திற்கு வந்து தன் மகனின் உடலைத் தேடுகிறான். கை கிடைத்தது. உடல் கிடைத்தது. தலை கிடைக்கவில்லை. தன் மகனின் தலை இல்லா உடலை மடி மேல் கிடத்தி அழுகிறான் இராவணன்.

அப்போதும் சீதையின் ஞாபகம் வருகிறது அவனுக்கு.

அந்த சீதையால், எனக்கு நீ செய்ய  வேண்டிய இறுதிக் கடன்களை நான் உனக்கு செய்ய வேண்டியதாயிற்றே என்று  புலம்புகிறான். என் கோபத்தால், உலகை எல்லாம் வென்று, இந்திரனின் செல்வத்தைப் பெற்று நான் நினைத்ததை முடித்து நின்றேன்.  ஆனால், இன்றோ அந்த சீதையால் எனக்கு நீ செய்ய வேண்டிய கருமங்களை நான் உனக்குச் செய்ய வேண்டியதாயிற்று என்று பச்சாதபத்தில் புலம்புகிறான்.

பாடல்

‘சினத்தொடும் கொற்றம் முற்றி,
   இந்திரன் செல்வம் மேவி,
நினைத்தது முடித்து நின்றேன்;
    நேரிழை ஒருத்தி நீரால்,
எனக்கு நீ செய்யத் தக்க
    கடன் எலாம், ஏங்கி ஏங்கி,
உனக்கு நான் செய்வது ஆனேன்!
    என்னின் யார் உலகத்து உள்ளார்.


பொருள் 

‘சினத்தொடும் = கோபத்தோடு

கொற்றம் முற்றி = அரசு எங்கும் செலுத்தி

இந்திரன் செல்வம் மேவி = இந்திரனின் செல்வத்தைப் பெற்று

நினைத்தது முடித்து நின்றேன் = நான் மனத்தில் நினைத்ததை முடித்து வந்தேன்

நேரிழை ஒருத்தி = சீதை என்ற பெண்ணால்

நீரால் = நீரால்

எனக்கு நீ செய்யத் தக்க கடன் எலாம் = எனக்கு நீ செய்ய வேண்டிய இறுதிக் கடனை  எல்லாம் 

ஏங்கி ஏங்கி = ஏங்கி ஏங்கி

உனக்கு நான் செய்வது ஆனேன்! = உனக்கு நான் செய்ய வேண்டியது ஆனேன்

என்னின் யார் உலகத்து உள்ளார் = என்னைப் போல யார் உள்ளார்கள்

காமமா அழித்தது அவனை ?

இல்லை !

அறம் பிறழ்ந்த வாழ்கை முறை அழித்தது.

எல்லா துன்பத்திற்கும் காரணம் எங்கோ அறம் பிறழ்த செய்கைதான்.

துன்பம் வரும்போது யோசித்துப் பாருங்கள். எங்கே அறம் பிழைத்தீர்கள் என்று ...



1 comment:

  1. அருமையான பாடல். இன்னும் கொஞ்சம் இந்தக் காட்சியில் இருந்து எழுதவும். (முன்பு மண்டோதரி புலம்பல் எழுதியது நினைவு இருக்கிறது.)

    ReplyDelete