Thursday, August 28, 2014

இராமாயணம் - புண் எலாம் எனக்கே ஆக்கி

இராமாயணம் - புண் எலாம் எனக்கே ஆக்கி 


அசோக வனத்தில் சீதையை சந்திக்கிறான் இராவணன். அவளிடம் தன் மனதில் உள்ள காதலை சொல்லுகிறான்.

"எந்த பெண்ணைப் பார்த்தாலும் உங்களைப் பார்ப்பது போலவே இருக்கிறது. யார் பெயரைக் கேட்டாலும் உங்க பேர் மாதரியே இருக்கு. எந்த கண்ணைப் பார்த்தாலும் உங்க கண்ணைப் பார்ப்பது போலவே இருக்கு. மன்மதனை என் மேல் அம்பு தொடுக்கும்படி செய்து, அந்த அம்பு தைத்து வரும் புண் எல்லாம் எனக்கே என்று ஆக்கி இதுவரை நடக்காத ஒன்றை செய்து விட்டீர்கள் "

என்றான்.

பாடல்

‘பெண் எலாம் நீரே ஆக்கி, பேர் எலாம் உமதே ஆக்கி,
கண் எலாம் நும் கண் ஆக்கி, காமவேள் என்னும் நாமத்து
அண்ணல் எய்வானும் ஆக்கி, ஐங் கணை அரியத் தக்க
புண் எலாம் எனக்கே ஆக்கி, விபரீதம் புணர்த்து விட்டீர்.

பொருள்

‘பெண் எலாம் நீரே ஆக்கி = எல்லா பெண்களையும் நீங்களே ஆகி

பேர் எலாம் உமதே ஆக்கி = எல்லா பெயர்களையும் உங்கள் பெயராக ஆக்கிக் கொண்டீர்கள்


கண் எலாம் நும் கண் ஆக்கி = எல்லா கண்களையும்  உங்கள் கண்களாக ஆக்கி

காமவேள் என்னும் நாமத்து = காம வேள் என்ற நாமம் கொண்ட

அண்ணல் = அண்ணல்

எய்வானும் ஆக்கி = என் மேல் குறிவைத்து எய்து 

ஐங் கணை  = ஐந்து மலர் அம்புகளை

அரியத் தக்க புண் எலாம் எனக்கே ஆக்கி = இதுவரை இல்லாத புண்களை எல்லாம் எனக்கே ஆக்கி

விபரீதம் புணர்த்து விட்டீர் = விபரீதம் செய்து விட்டீர்கள்

மன்மதனை , காமவேள் என்னும் நாமத்து அண்ணல் என்று மிக மிக மரியாதையுடன் குறிப்பிடுகிறான். காதல் படுத்தும் பாடு.

மன்மதனுக்கு வேறு ஒரு வேலையும் இல்லை. முழு நேரமும் இராவணனன் மேல் அம்பு விடுவதுதான் அவன் வேலை. "புண் எலாம் எனக்கே ஆக்கி".

வேறு யாருக்கும் புண் இல்லை. எனக்கு மட்டும்தான்.

பெண் எலாம் நீயே ஆகி என்று சொல்லி இருக்கலாம். சொல்ல வில்லை. நீரே ஆகி  என்று மரியாதையுடன் குறிப்பிடுகிறான். 

பெண்ணின் மேல் காதல். 
பெண்ணின் மேல் மரியாதை.
பெண்ணின் அழகின் மேல் மதிப்பு.

அவள் மேல் கொண்ட அன்பால், மரியாதையால், மதிப்பால் அவளிடம் உள்ளத்தை  திறந்து உண்மையை சொல்லும் பாங்கு. 

எல்லாவற்றிற்கும் நடுவில் நின்றது  - அறம்.

No comments:

Post a Comment