Friday, August 29, 2014

திருவிளையாடற் புராணம் - மண் சுமந்து , புண் சுமந்த கதை

திருவிளையாடற் புராணம் - மண் சுமந்து , புண் சுமந்த கதை


திருவிளையாடல் புராணம்.

அரசன் குதிரை வாங்கத் தந்த பணத்தில் திருபெருந்துறையில் கோவில் கட்டினார் மாணிக்க வாசகர்.

இறைவன் நரிகளை பரிகளாக்கி  தந்தான். பின் , அந்த பரிகள் மீண்டும் மீண்டும்   நரிகளாகி காட்டுக்குள் சென்று விட்டன.

கோபம் கொண்ட அரசன், மாணிக்க வாசகரை சுடு மணலில் உருட்டும்படி கட்டளை இட்டான்.

மாணிக்க வாசகரின் துயர் தீர்க்கும் பொருட்டு , மாணிக்க வாசகரின் பெருமையை உலகம் அறியும் பொருட்டு சிவன் நடத்திய திருவிளையாடலை காண்போம்.

திருவிளையாடல் என்றால் ஏதோ இறைவன் பொழுது போகாமல் செய்த விளையாடல் என்று நினைக்கக் கூடாது. அந்த கதைகளின் பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன.

அவற்றைப் பற்றி சிந்திப்போம்.

பாடல்

பண்சு மந்தமறை நாட ரும்பொருள் பதஞ்சு மந்தமுடியார்மனம்
புண்சு மந்ததுயர் தீர வந்தபரி நகரி ளாயடவி போனபின்
விண்சு மந்தசுர நதியெ னப்பெருகு வித்த வையையிது விடையவன்
மண்சு மந்துதிரு மேனி மேலடி வடுச்சு மந்தகதை யோதுவாம்.

சீர் பிரித்த பின்

பண் சுமந்த மறை நாடரும் பொருள் பதம் சுமந்த முடியார் மனம்
புண் சுமந்த துயர் தீர வந்த பரி நரிகளாய் அடவி போனபின்
விண் சுமந்த சுர நதி என பெருகுவித்த வையை இது விடையவன்
மண் சுமந்து திருமேனி மேல் அடி வடு ச்சுமந்த கதை ஓதுவாம் 


பொருள்

பண் சுமந்த = இசையோடு கூடிய பாடல்களை கொண்ட

மறை நாடரும் =  மறைகள் ஓதும் நாடார்

பொருள் = பொருள் செறிந்த

பதம் = திருவடிகளை

சுமந்த = சூடிய

முடியார் = தலையினை கூடிய மாணிக்க வாசகரின்

மனம் = மனம்

புண் சுமந்த துயர் தீர வந்த = புண் படும்படி நிகழ்ந்த துயர் தீர வந்த

 பரி நரிகளாய் அடவி போனபின் = குதிரைகள் நரிகளாகி கானகம் போன பின்

விண் சுமந்த = ஆகாயம் சுமந்த

சுர நதி என  = கங்கை என

பெருகுவித்த வையை இது = பெருகி வந்த வைகை இது

விடையவன் = எருதின் மேல் ஏறிய சிவன்  

மண் சுமந்து = மண் சுமந்து

திருமேனி மேல் = தன்னுடைய திருமேனியில்

அடி வடுச் சுமந்த கதை ஓதுவாம் = அடி பட்டு வடு சுமந்த கதையைச் சொல்லுவாம்

எவ்வளவு அழகான பாடல் !

மேலும் சுவைப்போம் , சிந்திப்போம்


No comments:

Post a Comment