Sunday, August 3, 2014

கந்தர் அநுபூதி - அற கதி கெட்டு

கந்தர் அநுபூதி - அற கதி கெட்டு 


நல்ல நூல்கள் ஒன்றிரண்டு கிடைத்தால் அதை பொக்கிஷமாக வைத்துப் பாதுகாக்கலாம். நமக்கோ, கணக்கில் அடங்கா நூல்கள் தமிழில் கிடைத்து இருப்பதால் அவற்றின் அருமை தெரியாமல் இருக்கிறோம் நாம்.

எண்ணற்ற நூல்களை விடுங்கள், ஒரு நூலில் எத்தனை பாடல்கள், ஒவ்வொரு பாடலிலும் எத்தனை ஆழமான கருத்துகள்...ஒரு நூலைப் படித்து முடிக்க ஒரு ஆயுள் போதாது.

திருக்குறள், திருவாசகம், திரு மந்திரம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருப்புகழ், என்று எத்தனை எத்தனை புத்தகங்கள்.

நாமும் அறியாமல், அடுத்த சந்ததிக்கும் இவற்றை அறிமுகம் செய்யாமல் மிகப் பெரிய சொத்தை அனுபவிக்காமல் போகிறோம்.

கந்தர் அனுபூதியில் ஒரு பாடல்...

சுகத்தில் பெரிய சுகம் எது ?

புலன்கள் மூலம் கிடைக்கும் உடல் இன்பம். சுவை, காட்சி, காதால் கேட்பதால் பெரும் இன்பம், தொடுவதால் கிடைக்கும் இன்பம், நறுமணங்களை நுகர்வதால் வரும் இன்பம் என்று கிடைக்கும் புலன் இன்பங்கள்.

உணர்வுகள் மூலம் கிடைக்கும் இன்பம் - தாய்மை, கணவன், மனைவி, பெற்றோர், என்ற உணர்வுகள் மூலம் கிடைக்கும் இன்பம்.

இவை எல்லாவற்றையும் விட பெரியது, ஞானத்தின் மூலம் கிடைக்கும் சுகம். அறிவின் மூலம் கிடைக்கும் சுகம் பெரிய சுகம்.

இந்த சுகத்தை யாரிடம் இருந்து பெறலாம் ?

ஞான சுகத்தின் அதிபதி யாரோ, அவனிடம் இருந்து பெறுவதுதானே முறை.

பாடல்

மதிகெட் டறவா டிமயங் கியறக்
கதிகெட் டவமே கெடவோ கடவேன்
நதிபுத் திரஞா னசுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே.

சீர் பிரித்த பின்

மதி கெட்டு அற வாடி மயங்கி அறக்
கதி கெட்டு அவமே கெடவோ கடவேன்
நதி புத்திர ஞான சுக அதிப -அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே.

பொருள்

மதி கெட்டு  = அனைத்து சிக்கல், மற்றும் துன்பங்களுக்கும் காரணம் அறிவு சரியாக வேலை செய்யாமைதான். அறிவு அற்றம் காக்கும் கருவி என்பார் வள்ளுவர்.

கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்பது பழமொழி.

அற வாடி = அற என்றால் முற்றிலும், முழுவதும், அதிகமான

மயங்கி  = மயங்கி

அறக் கதி கெட்டு = அற வழி கெட்டு. புத்தி கெட்டுப் போகும்போது அற வழி மறந்து போகும். அற வழியில்      

அவமே கெடவோ கடவேன் = வீணாக கெட்டுப் போவதற்கா நான் இருக்கிறேன்

நதி புத்திர = நதியின் புத்திரனே. சிவனின் நெற்றில் கண்ணில் இருந்து வந்த சுடரை வாயு பகவானிடமும் , அக்னி பகவானிடமும் கொடுத்தார். அவர்களால் அதன் வெம்மையை தாங்க முடியவில்லை. அவர்கள் கங்கையிடம் கொடுத்தார்கள். அவள் அதை சரவணப் பொய்கையில் விடுத்தாள். இறுதியில் அவளால் தரப் பட்டதால் முருகனை நதி புத்திரர் என்று அழைக்கிறார் அருணகிரிநாதர்.

ஞான சுக அதிப = ஞானத்தால் வரும் சுகத்தின் அதிபதியே. ஞானமும், அதில் இருந்து வரும் சுகமும் ....இரண்டுக்கும் அதிபதி அவன். யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம்தானே கேட்க முடியும் ?

அத் திதி புத்திரர் = அத் திதியின் புத்திரர்களான சூரபத்மன் முதலியோரின்  

வீறு அடு சேவகனே. = வீரத்தை சண்டை இட்ட சேவகனே 


காசிபருக்கும் மாயைக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன் முதலிய அரக்கர்கள். எண்ணிறந்த  வரத்தைப் பெற்றவர்கள். 1008 அண்டங்களை 108 யுகங்கள் ஆளும்  வரம் பெற்றவர்கள். 

என்ன இருந்து என்ன பயன் ? அற வழியில் இருந்து தவறினார்கள். மாண்டு போனார்கள். 

அவர்கள் செய்த தவறு என்ன ? 

நன்றி மறந்தது. எல்லாம் தந்த இறைவனுக்கு நன்றி மறந்த தவறு. 

என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்பது வள்ளுவம்.  

செய்த நன்றியை மறந்தான், மாண்டான். 

மதி கெட்டு , அற வழி மறந்து, போகாத வழியில் சென்று முடிவைத் தேடிக் கொண்டான். 

எத்தனை நன்றிகளை நாம் நினைத்துப் பார்க்கிறோம் ? 

பட்டியல் போடுங்கள் ...உங்களுக்கு எந்த விதத்திலாவது உதவி செய்தவர்களின்   பெயரை. நன்றி கூறுங்கள் அவர்களுக்கு. 

Thanks Giving day என்று ஒரு நாள் வைத்து இருக்கிறோம். வருடம் பூராவும்  நன்றி செலுத்தும்  நாள்தான். 

No comments:

Post a Comment