Sunday, August 31, 2014

பட்டினத்தார் பாடல்கள் - கருப்பையூர் வாராமல் கா

பட்டினத்தார் பாடல்கள் - கருப்பையூர் வாராமல் கா 


எத்தனை எத்தனையோ புத்தகங்கள் வாசிக்கிறோம். யார் யார் சொல்வதேல்லாமோ கேட்கிறோம். எல்லாம் சரி என்று பட்டாலும், நம் வாழ்க்கையில் ஒரு மாறுதலும் இல்லை.

"இதெல்லாம் கேக்க படிக்க நல்லா இருக்கும்...நடை முறைக்கு சரிப் படுமா " என்று ஒதுக்கி தள்ளிவிட்டு வேலையைப் பார்க்க போய் விடுகிறோம்.

ரொம்ப ஒண்ணும் படிக்க வில்லை - ஒரே ஒரு வரிதான் படித்தார் பட்டினத்தார் - ஒம்பது கோடி சொத்தை ஒரே நாளில் உதறி விட்டு கிளம்பி விட்டார்.

அவர் வாசித்த  அந்த ஒரு வரி "காதற்ற ஊசியும் வாராது காண் உம் கடைவழிக்கே"

ஒரு பொறி பட்டது. கற்பூரம் பற்றிக் கொண்டது.

அவர் பாடிய ஒரு பாடல் கீழே.


மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன் 
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா 
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை 
கருப்பையூர் வாராமற் கா

நாம் பாட்டுக்கு பிறந்து விடுகிறோம். நம்மால் எவ்வளவு பேருக்கு வலி, எவ்வளவு  பேருக்கு சங்கடம், அலுப்பு, சலிப்பு.

ஒவ்வொரு முறை நாம் பிறக்கும் போதும் ஒரு அன்னை நம்மை சுமக்க வேண்டி இருக்கிறது. சுமந்து பெற்றால் மட்டும் போதுமா ? பாலூட்டி, கண் விழித்து, வளர்க்க வேண்டி இருக்கிறது. அவளின் உடல் என்ன பாடு பாடும். ஏதோ ஒரு முறை   என்றால் பரவாயில்லை. எத்தனை பிறவிகள், எத்தனை தாய் வயிற்றில்  பிறந்து அவளை சங்கடப் படுத்துகிறோம்.

நாம் ஒவ்வொரு முறை பிறக்கும் போதும் பிரம்மா நம் தலையில் விதியை எழதி  அனுப்பிகிறான். எழுதி எழுதி அவனுக்கும் கை சலித்து போய் இருக்கும். அத்தனை  பிறவிகள்.

பிறந்த பின் சும்மா இருக்க முடிகிறதா. அங்கும் இங்கும் எங்கும் அலைந்து திரிகிறோம்.  நடையாய் நடந்து கால் சலித்துப்  போகிறோம்.

எல்லாம் போதும், இருப்பையூர் வாழும் சிவனே, இன்னும் ஓர் அன்னையின் கருப்பையில்  வாராமல் என்னை காத்தருள்வாய்.


1 comment:

  1. இதில் வரும் இருப்பையூர் என்பது எந்த ஸ்தலம்?

    ReplyDelete