Tuesday, August 12, 2014

சிலப்பதிகாரம் - வண்டு ஊசலாடும் புகார் எம் ஊரே

சிலப்பதிகாரம் - வண்டு ஊசலாடும் புகார் எம் ஊரே 


அவளை, அவன் அப்படி காதலித்தான். அவளோ முதலில் அவனைத் திரும்பி கூட பார்க்கவில்லை. இருந்தும் அவன்  விடவில்லை.அவளுக்கு பரிசு பொருள் எல்லாம் வாங்கித் தருவான்.

நாள் ஆக நாள் ஆக அவளுக்கும் அவன் மேல் அன்பு பிறந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள்.

அப்படியே  சிறிது நாள் சென்றது.

முதலில் இனித்த காதல், நாள் பட நாள் பட சுவாரசியம் குறையத் தொடங்கியது.

அவளை பார்க்க வருவது குறைந்தது. அவளோடு பேசும் நேரமும் குறைந்தது.

அவன் அவளை கெஞ்சியது போக, இப்போது அவள் அவனை கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்.

அந்த ஊரில், வண்டுகள் இருக்கும். அவை குளத்தில் மலரும் நீல மலர்களைத் தேடி வரும். அங்கே பெண்கள் நீராட , நீர் எடுக்க வருவார்கள். அவர்களின் முகம் நீரில் பட்டு பிரதிபலிக்கும்.

அந்த வண்டுகளுக்கு குழப்பம் . எது மலர் என்று ?

உண்மைக்கும், பொய்க்கும் வித்தியாசம் தெரியாமல் தள்ளாடும் வண்டுகளைக் கொண்டது எம் ஊர் என்கிறாள் தோழி.


 ஊடாடும் அர்த்தம் ... நீ நல்லவனா அல்லது மற்றவனா என்று தெரியாமல் தலைவி உன்னிடம் மனதை பறிகொடுத்து விட்டாள்

பாடல்


காதல ராகிக் கழிக்கானற் கையுறைகொண் டெம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாமிரப்ப நிற்பதையாங் கறிகோ மைய
மாதரார் கண்ணு மதிநிழல்நீ ரிணைகொண்டு மலர்ந்த நீலப்
போது மறியாது வண்டூச லாடும் புகாரே எம்மூர்.

கொஞ்சம் சீர் பிரிப்போம்

காதலராகிக் கழிக் கானற் கையுறை கொண்டு எம் பின் வந்தார் 
ஏதிலர் தாமாகி யாம் இரப்ப நிற்பதை யாம் அறியோம் ஐய 
மாதரார் கண்ணு மதி நிழல்நீரிணை கொண்டு மலர்ந்த நீலப்
போதும்  அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம்மூர்.


பொருள்


காதலராகிக் = காதலராகி

கழிக் கானற் = கடற்கரையில் உள்ள சோலையில்

கையுறை = பரிசுகள்

கொண்டு எம் பின் வந்தார் = கொண்டு எம் பின்னால் வந்தார்

ஏதிலர் = (இன்று) யாரோ போல

தாமாகி = அவர் ஆகி

யாம் இரப்ப  நிற்பதை = நாங்கள் வேண்டி நிற்பதை

யாம் அறியோம் ஐய = நாங்கள் அறியவில்லை ஐயா. இப்படியும் நடக்கும் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை ஐயா

மாதரார் கண்ணு = பெண்களின் கண்ணும்

மதி நிழல் = நிலவின் நிழலைக்  

நீரிணை கொண்டு = நீரினில் கொண்டு

மலர்ந்த = மலர்ந்த 

நீலப் போதும்  = போது என்றால் மலர். நீல மலர்களை

அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம்மூர் = அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எங்கள் ஊர்

கோவலனும் மாதவியும் தனித்து இருக்கும்போது , மாதவி பாடிய பாடல்



1 comment:

  1. நல்ல உள்ளர்த்தம்! நன்றி.

    ReplyDelete