Sunday, August 3, 2014

சிலப்பதிகாரம் - சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்

சிலப்பதிகாரம் - சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்


கணவன் வேறொரு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருக்கிறான். மனைவிக்கும் அது தெரியும். வீட்டில் உள்ள பொருள்களையெல்லாம் அந்த விலை மகளிடம் தருகிறான். எல்லாம் தீர்ந்த பின் ஒரு நாள் மனைவி முன் வந்து நிற்கிறான்.

இன்றைய சூழ்நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ?

மனைவி என்ன சொல்லி இருப்பாள் ? கணவன் என்ன சொல்லி இருப்பான் ?

கோவலன் தவறு செய்தான். மாதவி வீட்டில் இருந்தான். செல்வங்களை எல்லாம் தொலைத்தான்.

பின் கண்ணகியிடம் வந்தான். அவளிடம் தான் தவறு செய்து விட்டதாகக் கூறவில்லை.

மன்னிப்பும் கேட்கவில்லை. எனக்கு வெட்கமாக இருக்கிறது என் செயலைக் கண்டால் என்று மட்டும் கூறுகிறான்.

கண்ணகி தன் கால் சிலம்பைத் தருகிறாள். என்னோடு வா என்று அவளை அழைத்துக் கொண்டு மதுரை வருகிறான்.

வரும் வழி எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. மதுரை வந்து, மாதரி வீட்டில் தங்கும் போது, சொல்லுகிறான்.

கண்டவர்களோடு தங்கினேன். சிறு சொல் பேசும் கூட்டத்தாரோடு சேர்ந்தேன். பெரியவர்கள் சொன்ன வழியில் இருந்து விலகினேன். தாய் தந்தையர்க்கு செய்ய வேண்டிய கடமையையும் செய்ய வில்லை. சிறிய வயதில் பெரிய அறிவுடைய உனக்கும் தீமை செய்தேன். எனக்கு நல்ல கதி கிடைக்காது என்று வருந்தி சொல்கிறான்.


 பாடல்

வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர்

நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ
இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன்
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்
வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என்செய் தனையென

பொருள்



வறுமொழியாளரொடு = வறுமையான மொழி உள்ளவர்கள். பயனில்லாத சொல் பேசுபவர்களோடும் 

வம்பப் பரத்தரொடு - வம்பு அளக்கும் பரத்தமை கொண்டோரோடும்

குறுமொழிக் கோட்டி = சிறுமையான மொழி பேசும்

நெடு நகை புக்கு - நகைப்புக்கு இடமாகி

பொச்சாப்பு உண்டு - மறதியும் கொண்டு

பொருள் உரையாளர் = பொருள் நிறைந்த மொழிகளை சொல்லும் பெரியவர்களின்


நச்சுக் கொன்றேற்கு - நல ஒழுக்கத்தை கொன்று

நன்னெறி உண்டோ - எனக்கு நல்ல கதி கிடைக்குமா ?

இருமுது குரவர் = பெற்றோர்கள்

 ஏவலும் பிழைத்தேன் - அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளையும் செய்யாமல் பிழை செய்து விட்டேன்

சிறுமுதுக் = சிறிய வயதில் முதிய அறிவைக் கொண்ட உனக்கும் 


குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் - குறை உண்டாகும்படி சிறுமை செய்தேன்

வழு வெனும் பாரேன் - தவறு என்றும் அறிய மாட்டேன்

மா நகர் = பெரிய ஊரான நம் ஊரை விட்டு

மருங்கு ஈண்டு எழுகென எழுந்தாய் - வா என்று சொன்னபோது உடனே என்னுடன் வந்தாய்

என் செய்தனை என - என்ன பெரிய காரியம் செய்தாய் ;

      

1 comment:

  1. மிகவும் உணர்ச்சிகரமான பாடல். "சிறு முது" என்பது என்ன சுவையான சொல்! நன்றி.

    ReplyDelete