Thursday, August 21, 2014

இராமாயணம் - இராவணன் தோற்றம்

இராமாயணம் - இராவணன் தோற்றம் 


சீதை எப்படி இருந்தாள் என்று நேற்று பார்த்தோம்.

சீதையை சந்திக்க புறப்படும் இராவணன் எப்படி இருந்தான் என்று  பார்ப்போம்.

பெரிய மலை. அந்த மலையில் இருந்து அருவி விழுகிறது. தூரத்தில் இருந்து பார்த்தால் , அந்த அருவி ஏதோ வைரத்தால் செய்த மாலை அந்த மலையின் கழுத்தில் தொங்குவது போல இருக்குமே அந்த மாதிரி இராவணின் கழுத்தில் மணி மாலை தொங்குகிறது.

அவன் மகுடம் மின்னலைப் போல ஒளி வீசுகிறது.

கோடி சூரியன் ஒன்று சேர்ந்தார் போல இருக்கிறது அவன் மகுடம்.

யானையின் நடை கம்பீரமாக இருக்கும். உணவில்லாமல், சோர்ந்த யானை  அல்ல. நன்றாக உண்டு, தன் ஜோடியோடு இணைந்து களிப்புற்ற யானை எப்படி நடந்து வருமோ, அந்த யானை நாணும் படி நடந்து வந்தான்.

சீதையை  காணப் போகிறோம் என்ற குஷி.

பஸ் ஸ்டாண்டில் காதலியை பார்க்கப் போகும் போது நம் பசங்க எப்படி ஒரு தலையெல்லாம் சீவி, கொஞ்சம் பவுடர் அடித்து, காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு, உற்சாகமாக செல்வது இல்லையா ....அது போலத்தான்...



பாடல்

மின் ஒளிர் மகுட கோடி வெயில் ஒளி விரித்து வீச,
துன் இருள் இரிந்து தோற்ப, சுடர் மணித் தோளில்
                                    தோன்றும்
பொன்னரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப
நல் நெடுங் களி மால் யானை நாணுற, நடந்து வந்தான்.

பொருள்

மின் = மின்னல் போல்

ஒளிர் = ஒளிரும். திரும்பிய பக்கம் எல்லாம் மின்னல் அடிக்கும்

மகுட = மகுடம்

 கோடி வெயில் = கோடி சூரியப் பிரகாசம் போல

ஒளி விரித்து வீச = ஒளியை விரித்து நாலா பக்கமும் வீச

துன் இருள் = நெருங்கி வந்த இருள்

இரிந்து தோற்ப = தோற்று ஓடிப் போக

சுடர் மணித் = சுடர் வீசும் மணிகள்

தோளில் தோன்றும் = தோளில் தோன்றும்

பொன்னரி மாலை= பொன்னாலான மாலை

நீல வரையில் = மலையின் மேல்

வீழ் அருவி பொற்ப = விழுகின்ற அருவி போல

நல் = நல்ல

நெடுங் = பெரிய

களி = மகிழ்ச்சியான

மால் யானை  = ஆசை (மயக்கம்) கொண்ட யானை

நாணுற, நடந்து வந்தான் =  நாணம்    தோன்ற  நடந்து வந்தான்


1 comment:

  1. இவ்வளவு அலங்காரமும், யானையைப் போன்ற உறுதியும், பலமும் இருந்தாலும் நாணம் கொண்டு நடந்து வந்தானாம்! அந்த "நாணுற" என்ற ஒரே வார்த்தை எப்படி இந்தக் காட்சிக்கே அழகு கூட்டுகிறது!

    நன்றி.

    ReplyDelete