Tuesday, August 19, 2014

தேவாரம் - இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ

தேவாரம் - இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ


எனக்காகவா நீ இத்தனையும் செய்தாய் ?

என்னை அன்பால் அணைத்துக் கொண்டாய். உன்னுடைய அருள் பார்வையால் என்னை நீர் ஆட்டினாய். நீ எவ்வளவு பெரிய ஆள், எனக்காக சாதாரண ஆளாக வந்தாய். என்னை ஆட் கொண்டாய். நான் செய்த பிழைகள் அனைத்தும் பொருத்தாய் . இத்தனையும் எனக்காகவா செய்தாய் ? உன் கருணையை என்னவென்று சொல்லுவேன் ....என்று உருகுகிறார் திரு நாவுக்கரசர்.

பாடல்  

அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள்நோக்கில் தீர்த்தநீர் ஆட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைதனைகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே.

பொருள்

அத்தா = தந்தையே

உன் அடியேனை = உன் அடியவனான என்னை

அன்பால் ஆர்த்தாய் = அன்பால் அனைத்துக் கொண்டாய்

அருள்நோக்கில் = உன்னுடைய அருள் பார்வை என்ற 

தீர்த்தநீர் ஆட்டிக் கொண்டாய் = தீர்த்த நீரால் என்னை நீராட்டினாய்

எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய் = எவ்வளவு பெரிய ஆள் நீ. எனக்காக எளியவனாக வந்தாய்

எனை ஆண்டுகொண்டு = என்னை ஆட் கொண்டு

இரங்கி = என்பால் இரக்கம் கொண்டு

ஏன்றுகொண்டாய் = ஏற்றுக் கொண்டாய்

பித்தனேன் = பித்தனேன்

பேதையேன் = பேதையேன்

பேயேன் = பேயேன்

நாயேன் = நாயேன்

பிழைதனைகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே = நான் செய்த பிழைகள் அனைத்தும் பொருத்தாய்

இத்தனையும் = இவை அனைத்தும்

எம் பரமோ = எனக்காகவா ?

ஐய ஐயோ = ஐய ஐயோ

எம்பெருமான் = எம் பெருமானே

திருக்கருணை இருந்தவாறே = உன் திருக்கருணை இவ்வாறு இருந்தது

.
இது மேலோட்டமாக நாம் அறியும் பொருள்.

எழுதியவர் நாவுக்கு அரசர். 


அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் =  பயத்தால் கூட இறைவனிடம் அடியவனாக இருக்கலாம். ஆனால், திருநாவுக்கரசரோ, அன்பால் அடிமை கொண்டாய்  என்கிறார்.  

அருள்நோக்கில் தீர்த்தநீர் ஆட்டிக் கொண்டாய் = நம் மேல் தான் எத்தனை அழுக்கு. காமம், கோபம்,  மோகம், மதம், பொறாமை, பொய், அழுக்காறு என்று ஆயிரம் அழுக்கு. அத்தனை அழுக்கையும் அவனுடைய அருள் பார்வை என்ற புனித நீரால் நீராட்டினான்.

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை பிரபஞ்சம் என்னும் 
சேற்றைக் கழிய வழிவிட்டவா செஞ்சடா அடவியின் மேல் 
ஆற்றை பணியை இதழியை தும்பையை அம்புலியின்
கீற்றை புனைந்தவன் பெருமான் மகன் கிருபாகரனே 

என்பார் அருணகிரி நாதர். பிரபஞ்சம் என்ற சேற்றை அள்ளி பூசிக் கொண்டு இருக்கிறோம்.

பித்தனேன் = ஒரு வழி நில்லாதவன்,

பேதையேன் = ஒன்றும் அறியாதவன் , முட்டாள்

பேயேன் = வீணாக அலைபவன்

நாயேன் = கீழானவன்

நாவுக்கரசர் இப்படி என்றால், நாம் எல்லாம் எப்படியோ.

பிழைதனைகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே = இவ்வளவு மோசமானவன் செய்வதெல்லாம் பிழையாகத் தானே இருக்கும். அத்தனையும் பொறுத்தான்.

இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ = அவரால் தாங்க முடியவில்லை. ஐயோ, எனக்காகவா இத்தனையும் என்று உருகுகிறார்.

எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே.


1 comment:

  1. மிகவும் உருக்கமானா பாடல்.

    ReplyDelete