Tuesday, September 16, 2014

சிவ புராணம் - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - பாகம் 2

சிவ புராணம் - இன்பமும் துன்பமும்  இல்லானே உள்ளானே  - பாகம் 2


பாடல்

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

பொருள்

நேச = அன்பு

அருள் = கருணை

புரிந்து =  புரிந்து

நெஞ்சில் வஞ்சம் கெட = மனதில் உள்ள  வஞ்சனைகள் கெட

பேராது நின்ற = விலகாமல் நின்ற

பெரும் கருணைப் =  பெரிய கருணை

பேர் ஆறே = பெரிய ஆறே

ஆரா அமுதே! = அருமையான அமுதம் போன்றவனே

அளவு இலாப் பெம்மானே! = அளக்க முடியாத பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! = ஆராய்ந்து அறியாதவர்கள் மன்னதில் ஒளிக்கும் ஒளி போன்றவனே

நீராய் உருக்கி, =  நீர் போல உருக்கி

என் ஆர் உயிர் ஆய் நின்றானே = என் உயிர் போல  நின்றவனே

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! = இன்பமும் துன்பமும் இல்லாதவனே , உள்ளவனே

இவ்வளவுதான் பாட்டின் சொல் பொருள்  .விளக்கம்

இதன் உள் அர்த்தத்தை    சிந்திக்க சிந்திக்க விரியும்



சிந்திப்போம் 

-------------------பாகம் 2 -----------------------------------------------------------------------------


"நேச அருள் புரிந்து" 

நேசம் என்றால்  அன்பு.    

அது என்ன அன்பு - அருள் புரிந்து ?

அன்புக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு ?

அன்பு என்பது தொடர்புடையவர்கள் மேல்  கொள்வது.

அருள் என்பது பொதுவாக அனைத்து உயிர்கள் மேலும் கொள்வது. 

அதனால் தான் வள்ளுவர் அன்புடைமையை இல்லறவியலிலும் , அருளுடைமையை  துறவரவியலிலும் வைத்தார். 

இறைவன் தன்னை வழிபடுபவர்கள் மேல் மட்டும் அல்ல, எல்லா உயிர்கள் மேலும்  அன்பு செலுத்துபவன். 

தமிழால் அன்று வைத்தாரையும் வாழ வைப்போன் என்பார் அருணகிரிநாதர். 

"நெஞ்சில் வஞ்சம் கெட"

வஞ்சம் என்பது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது அல்லது    செய்வது. 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.

என்பார் வள்ளுவர். 

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார்  வள்ளலார்.

அப்படி, இறைவன் நம் மனதில் உள்ள வஞ்சனைகளை எல்லாம் போகும்படி  
செய்வான்.

"அளவு இல்லாப் பெம்மானே "

அளவு என்பது மனிதன் வைத்துக் வைத்துக்  கொண்டது. காலம், பருமன், நீள அகலங்கள் , நிற அளவுகள் என்று எல்லாம் மனிதன் தன் வசதிக்காக  வைத்துக்  கொண்டது.  இறைவன் இந்த அளவுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். 

அவனை கால அளவில் அடைக்க முடியாது - எப்போது  தோன்றினான், எப்போது  முடிவான் என்று அளந்து சொல்ல முடியாது. 

அளவு இல்லாத ஒன்றை மனித மனம் கற்பனை  செய்து கூட பார்க்க முடியாது. 

ஒரு நாள் கடலில் உள்ள ஒரு ஆமை கிணற்றுக்குள் இருக்கும்   இன்னொரு ஆமையை சந்தித்தது. 

அப்போது கடல் ஆமை கிணற்று ஆமையிடம் சொன்னது, "நான் கடலில் இருந்து  வருகிறேன் "என்றது. 

கி. ஆமை:  கடல் எப்படி இருக்கும் ?

க. ஆமை: கடல் இந்த கிணறு மாதிரிதான் ஆனால் ரொம்ப பெரியது என்றது. 

கி. ஆமை ஒரு கரையில் இருந்து கிணற்றின் மத்திய பாகம் வரை தவ்வியது..."இவ்வளவு  பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கடல் ஆமை சிரித்துக் கொண்டே சொன்னது, "இல்லை இல்லை...இதை விட  மிகப்  பெரியது "என்றது. 

உடனே கிணற்று ஆமை - மீண்டும் கரைக்கு வந்து இப்போது முக்கால் கிணறு  தாண்டியது...."இவ்வளவு பெரிசா இருக்குமா "என்று கேட்டது. 

கிணற்று ஆமைக்கு கடலின் அளவை எப்படி சொல்வது ? கிணற்று ஆமைக்கு தெரிந்தது  எல்லாம் கிணற்றின்  அளவுதான்.

மணிவாசகர் கடல் ஆமை. நாம் கிணற்று ஆமை. நமக்குச் சொல்கிறார்  

"அளவு இல்லாப் பெம்மானே " என்று. 

 (மேலும் சிந்திப்போம் )


No comments:

Post a Comment