Tuesday, September 2, 2014

இராமாயணம் - மந்திரம் இல்லை, மருந்து இல்லை

இராமாயணம் - மந்திரம் இல்லை, மருந்து இல்லை 


பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று சொல்வார்கள்.

நல்லவற்றை நல்லவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.

உயர்ந்த நூல்களை கீழானவனுக்கு சொல்லித்தந்தால் அவன் அந்த உயர்ந்த நூல்களை கீழ்மைப் படுத்துவான். அவன் அறிவு அவ்வளவுதான்.

அவன் ஆணவம், தான் அந்த உயர்ந்த நூல்களில் சொல்லியவற்றை விட அதிகம் அறிந்தவன் என்று மார் தட்டச் சொல்லும்.

இங்கே, அசோகவனத்தில் சிறை இருக்கும் சீதையிடம் சொல்கிறான்.

"சீதை, முன்னொரு காலத்தில் அகலிகை என்று ஒரு பெண் இருந்தாள் . அவள் இந்திரன் மூலம் காதல் என்றால் என்ன என்று அறிந்தாள் . அதனால் அவளுக்கு ஒரு இகழும் இல்லை. என்னுடைய மையல் நோய்க்கு மந்திரம் இல்லை, மருந்து இல்லை. உன்னுடைய தாமரை போன்ற சிவந்த இதழ்களில் இருந்து வரும் அமுதம் அன்றி வேறு ஒன்றும் இல்லை, அமுதம் போன்ற சொற்களை உடையவளே"

பாடல்

அந்தரம் உணரின், மேல்நாள்,
    அகலிகை என்பாள், காதல்
இந்திரன் உணர்த்த, நல்கி
    எய்தினாள், இழுக்கு உற்றாேளா?
மந்திரம் இல்லை, வேறு ஓர்
    மருந்து இல்லை, மையல் நோய்க்குச்
சுந்தரக் குமுதச் செவ்வாய்
    அமுது அலால்; அமுதச் சொல்லீர்! ‘

பொருள் 

அந்தரம் உணரின் = உள்ளே உள்ளதை உணரப் போனால்

மேல்நாள் = முன்பொரு நாள்

அகலிகை என்பாள் = அகலிகை என்ற ஒரு பெண்

காதல் இந்திரன் உணர்த்த = காதல் என்றால் என்ன என்று இந்திரன் உணர்த்த

நல்கி = அவளும் வழங்கி

எய்தினாள் = அடைந்தாள்

இழுக்கு உற்றாேளா? = அதனால் அவளுக்கு ஒரு இழுக்கு வந்ததா

மந்திரம் இல்லை = மந்திரம் இல்லை

வேறு ஓர் மருந்து இல்லை = வேறு ஒரு மருந்து இல்லை

மையல் நோய்க்குச் = மையல் நோய்க்கு

சுந்தரக் = அழகிய

குமுதச் செவ்வாய் = தாமரை போன்ற சிவந்த இதழ்களின் 

அமுது அலால் = அமுதம் அன்றி

அமுதச் சொல்லீர் = அமுதம் போன்ற சொற்களை உடையவளே

எவ்வளவு அழகாக பேசுகிறான். அகலிகை இந்திரனோடு காதல் என்பதை என்ன என்று  அறிந்தாள் . அவளை இராமன்     கோவிக்கவில்லை. அது போல உன்னையும் கோவிக்க மாட்டான் என்று சொல்லாமல் சொல்லுகிறான்.


அகலிகையின் கதையை இந்த நோக்கில் இதுவரை யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள்.

அது மட்டும் அல்ல,

பெண்களுக்கு அவர்களை புகழ்ந்தால்  பிடிக்கும். ஆண்களுக்கும் பிடிக்கும் என்றாலும் பெண்களுக்கு அவர்களின் அழகின் மேல் கொஞ்சம் அதிகப்படியான கவனமும், கர்வமும் உண்டு.

சீதையை புகழ் சொற்களால் குளிப்பாடுகிறான் ... சுந்தரம் , குமுதம் , செவ்வாய், அமுதச் சொல்லீர் என்று புகழ்ந்து  தள்ளுகிறான்.

தன்னுடைய மையல் நோய்க்கு மருந்தும் இல்லை, மந்திரமும் இல்லை...உன் முத்தம் ஒன்று தான் இதற்கு மருந்து என்று  புலம்புகிறான்.

















No comments:

Post a Comment