Thursday, September 4, 2014

திருவிளையாடல் - திட்டமிடுதலும் செயல் படுதலும் (Planning and Execution )

திருவிளையாடல் - திட்டமிடுதலும் செயல் படுதலும் (Planning and Execution )



வைகை நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. அதை சரி செய்யுங்கள் என்று பாண்டிய மன்னன் மந்திரிகளுக்கு உத்தரவிடுகிறான். அவர்கள் எப்படி அதை செய்தார்கள் என்று ஒரே பாடல் விளக்குகிறது.

பாடல்


வெறித் தடக்கை மத யானை மந்திரிகள் வேறு வேறு
                                                  பல குடிகளும்
குறித்து எடுத்து எழுதி எல்லை இட்டு அளவு கோல்
                                                  கிடத்தி வரை கீறியே
அறுத்து விட்டு நகர் எங்கணும் பறை அறைந்து அழைத்து
                                                  விடும் ஆள் எலாம்
செறித்து விட்டு அவர்க்கு அளந்த படி செய்மின் என்று
                                                  வருவித்தனர்.



வெறித் = கோபமும் வீரமும் கொண்ட

தடக்கை = தும்பிக்கைகளை கொண்ட

மதயானை = மதயானைகளை கொண்ட

மந்திரிகள் - மந்திரிகள்

வேறு வேறு பல குடிகளும் - வேறு வேறான பல குடிகளை கொண்ட மக்களை

குறித்து எடுத்து எழுதி - குறிப்பு எடுத்து எழுதி

எல்லையிட்டு - யார் யார் எந்த இடத்தில் வேலை செய்ய வேண்டும் என்று எல்லை கோடுகளை வரைந்து

அளவு கோல் கிடத்தி  = அளவு கோலை (Scale ) வரை படத்தின் மேல் வைத்து 

வரைகீறி = எல்லைகளை வரைந்து 

அறுத்து விட்டு -   வரையறுத்து

நகர் எங்கணும் = ஊர் முழுவதும்

பறை அறைந்து = பறை சாற்றி அறிவித்து

விடும் ஆள் எலாம் செறித்து விட்டு - வேலை செய்யும் ஆட்களை எல்லாம் ஒன்றாக எல்லோரையும் ஓரிடத்தில் கொண்டு வந்து

அவர் அவர்க்கு அளந்தபடி செய்மின் என்று வருவித்தனர் - அவரவர்க்கு அளந்து கொடுத்த படி செய்யுங்கள் என்று கூறி அவர்களிடம் கூறினார்கள்


எவ்வளவு தெளிவான செயல் திட்டம்.

முதலில், மதுரையின் வரை படம் அவர்களிடம் இருந்திருக்கிறது.

இரண்டாவது, அவர்கள் வரை கோல் (scale ) வைத்திருந்திருக்கிறார்கள்

மூன்றாவது, யார் எந்த இடத்தில் வேலை செய்ய வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.

நான்காவது, தெளிவான அறிவிப்பு (communication ).

ஐந்தாவது, எல்லோரையும் ஓரிடத்தில் கொண்டுவந்து, அவர்களுக்கு அவர்கள் எங்கே வேலை  செய்ய வேண்டும் வரையறுத்து தருகிறார்கள். குழப்பம் இல்லாத  செயல் திட்டம்.

ஆறாவது, இப்படி வேலை நடக்கப் போகிறது என்று ஊர் எல்லாம் பறை அடித்து  அறிவிக்கிறார்கள். இப்படி வேலை செய்யப் போகிறவர்களுக்கு எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என்று அறிவிப்பு.

ஏழாவது, வேலைக்கு வேண்டிய ஆட்களை சேர்கிறார்கள் (resource mobilization ).

ஒரு பாடலுக்குள் எப்படி ஒரு அரசாங்கம் செயல் பட்டது என்று சொல்லி விடுகிறார்கள்.

எவ்வளவு ஆச்சரியமான அரசியல்.

தமிழ் இலக்கியத்தில் என்னவெல்லாம் இருக்கிறது.

மேலும் சிந்திப்போம்.




No comments:

Post a Comment