Monday, October 13, 2014

திருக்குறள் - சொற்புத்தி, சுயபுத்தி

திருக்குறள்  - சொற்புத்தி, சுயபுத்தி 


வாழ்வில் வெற்றி பெற வள்ளுவர் எளிமையான வழியைச் சொல்கிறார்.

ஒண்ணு சொல் புத்தி இருக்க வேண்டும். அல்லது சுய புத்தி இருக்க வேண்டும்.

தனக்காக தெரிய வேண்டும்.  இல்லை என்றால் தெரிந்தவர்கள் சொல்வதை கேட்டு அதன் படி நடக்க வேண்டும்.

உடல் நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் போவார்கள். அவர் ஒரு மருந்தைத் தருவார். அதை ஒழுங்காக சாப்பிடுவது கிடையாது. தனக்கும் தெரியாது, மருத்துவர் சொன்னாலும் கேட்பது இல்லை.

உயர்ந்த நூல்களை படிக்க வேண்டியது. ஆனால் அதில் சொல்லி உள்ளது போல நடப்பது கிடையாது. குதர்க்கம் செய்ய வேண்டியது.

அப்படிப் பட்டவர்களின் உயிர் அவர்களின் உடலுக்கு நோய் என்கிறார் வள்ளுவர்.

எப்படி நோய் உடலை வருத்துமோ  அது போல அந்த மடையர்களுக்கு உயிர் இருக்கும் வரை  துன்பம்தான்.உயிரே துன்பம் தான்.

பாடல்

ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர் 
போஒ மளவுமோர் நோய்.

சீர் பிரித்த பின்

வவும் செய்கலான் தான் தேரான் அவ் உயிர் 
போகும் அளவும் ஓர் நோய் 


பொருள்

ஏவவும் செய்கலான் = சொன்னதைச் செய்ய மாட்டான் 

தான் தேரான்  = அவனாகவும் தேர்ந்து அறிய மாட்டன்

அவ் உயிர் = அவன் உயிர்

போகும் அளவும் = உடலை விட்டு போகும் அளவும்

ஓர் நோய் = ஒரு நோய் போன்றதாகும்

நோய் உடலை வருத்தும். அது போல அறிவற்றகளின் உயிர் அவர்களை வருத்தும்.

நோய் யாரிடம் இருக்கிறதோ அவர்களை மட்டும் வருத்தாது. ஒருவரிடம் இருந்து  மற்றவர்களுக்கு பரவி அவர்களையும் வருத்தும். அது போல சொல் புத்தி, சுய புத்தி இரண்டும் இல்லாதவர்கள் தங்களுக்கு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கும் துன்பம் விளைவிப்பார்கள்.

இன்றும் இதை நாம் காண முடியும். முட்டாள்கள் எவ்வளவு துன்பத்தைத் தருகிறார்கள்.  தாங்கள் கெடுவது மட்டும் அல்ல. மற்றவர்களையும் கெடுத்து துன்பத்தை விதைக்கிறார்கள்.


முதலில் மற்றவர்கள் சொல்வதை கேட்டு செயல் பட வேண்டும். நாளடைவில் நமக்கே சொந்த அறிவு வர வேண்டும். எனவேதான் முதலில் சொல் புத்தியையும் பின் சுய புத்தியையும் சொன்னார் வள்ளுவர்.





1 comment:

  1. //முதலில் மற்றவர்கள் சொல்வதை கேட்டு செயல் பட வேண்டும். நாளடைவில் நமக்கே சொந்த அறிவு வர வேண்டும்.//

    இவை இரண்டுக்கும் இடையில் வரும் transition..ஐ கடக்கும் காலமும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete