Monday, October 13, 2014

இராமாயணம் - அறம் மறந்தனன்

இராமாயணம் - அறம் மறந்தனன் 


வாலி வதைக்குப் பின், சுக்ரீவன்  அரச பதவி பெற்றான். கார் காலம் வந்தது. பின்  சென்றது.

சீதையை தேட உதவி செய்கிறேன் என்று தான் சொன்ன வாக்குறுதியை மறந்தான்.

அந்த நேரத்தில் இராமன் , இலக்குவனிடம் கூறுகிறான்.

"பெறுவதற்கு அரிய செல்வத்தைப் பெற்றான். நாம் உதவி செய்த, நம் திறமையை அவன் நினைத்துப் பார்க்கவில்லை. ஒழுக்கம் தவறி விட்டான். அறத்தை மறந்து விட்டான். நம் மேல் உள்ள அன்பையும் மறந்து விட்டான். அது தான் போகட்டும் என்றால் நம் வீரத்தையுமா மறந்து விட்டான் அந்த வாழ்வில் மயங்கியவன் " என்று

பாடல்


'பெறல் அருந் திருப் பெற்று, உதவிப் பெருந்
திறம் நினைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்;
அறம் மறந்தனன்; அன்பு கிடக்க, நம்
மறன் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான்.


பொருள்

'பெறல் = பெறுவதற்கு

அருந் = அருமையான

திருப் பெற்று = செல்வத்தைப்

உதவிப் = நாம் செய்த உதவி

பெருந் திறம் நினைந்திலன் =என்ற பெரும் திறமையை நினைக்கவில்லை

சீர்மையின் தீர்ந்தனன் = ஒழுக்கம் குறைந்தவன்

அறம் மறந்தனன்; = அறத்தை மறந்தான்

அன்பு கிடக்க = அன்பு ஒரு புறம் கிடக்க, அதையும் மறந்து விட்டான்

நம் மறன் அறிந்திலன் = நம்முடைய வீரத்தைப்  அவன் சரியாக அறியவில்லை 

வாழ்வின் மயங்கினான் = வாழ்வியல் இன்பங்களில் மயங்கிக்   . கிடக்கிறான்

நன்றி மறப்பது அறம் அல்ல என்று நம் இலக்கியங்கள் நமக்குச் சொல்லித் தருகின்றன.

நன்றி மறந்ததால் அழிந்தவன் சூரபத்மன்.

எவ்வளவு எளிதாக பிறர் செய்த நன்றிகளை நாம் மறந்து விடுகிறோம்.

இனி மேல் ஒரு குறிபேட்டில் எழுதி வையுங்கள்....உங்களுக்கு யார் யார் என்ன என்ன உதவி செய்தார்கள் என்று. மறக்காமல் இருக்க  உதவும்.

நன்றி மறப்பது நன்றல்ல.

இராமணயம் படிப்பது கதை தெரிந்து கொள்வதற்கு அல்ல. வாழ்கையை தெரிந்து கொள்ள.

இனி என்ன நடந்தது ?

மேலும்  பார்ப்போம்.







No comments:

Post a Comment