Wednesday, October 15, 2014

சிவ புராணம் - சொல்லாத நுண் உணர்வாய்

சிவ புராணம் - சொல்லாத நுண் உணர்வாய் 


பாடல்

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள் 

போக்கும் = போவதும்

வரவும் = வருவதும்

புணர்வும் = இணைவதும்

இலாப் = இல்லாத

புண்ணியனே = புண்ணியனே

காக்கும் என் காவலனே = காவல் செய்யும் காவலனே

காண்பரிய = காண்பதற்கு அரிதான

பேரொளியே = பெரிய ஒளியே

ஆற்று இன்ப வெள்ளமே = ஆற்றின் வெள்ளம் போல வரும் இன்பமானவனே

அத்தா = அத்தனே

மிக்காய் நின்ற = மிகுதியாய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் = தோன்றும் சுடர் ஒளியாய்

சொல்லாத நுண் உணர்வாய் = சொல்லுவதற்கு அரிதான நுண்மையான உணர்வாணவனே


சொல்லாத நுண் உணர்வாய்

இறைவன் என்றால் யார் ? அவன் எப்படி இருப்பான் ? எங்கே இருப்பான் ? என்ற கேள்விகள்   ஒரு புறம்  இருக்கட்டும்.

இந்த உலகத்திற்கு வருவோம். 

லட்டு, ஜிலேபி போன்ற பல இனிப்புகளை நாம்  சுவைக்கிறோம். இனிப்பு என்றால் ? அந்த இனிப்பு எப்படி  இருக்கும் ? 

தாய் , தந்தை, அண்ணன் ,  தம்பி, அக்கா,தங்கை, கணவன் , மனைவி என்ற பல உறவுகளை  நாம் அனுபவிக்கிறோம். தாய்மை என்றால் என்ன ? மனைவியின் பாசம்  என்றால் என்ன? குழந்தையின் அன்பு என்றால் என்ன ? 

இவற்றை நம்மால் விளக்க முடியுமா ?

முடியாது.

உணர்வுகளை அனுபவிக்க  முடியும்.  உணர முடியும். ஆனால் விளக்க முடியாது. 

அன்றாடம் அனுபவிக்கும் உணர்வுகளுக்கே இந்த மாதிரி என்றால், இறை உணர்வை  என்ன என்று சொல்லுவது. 

அது இவற்றை எல்லாம் விட மிக நுண்மையானது. 

ஆழ்ந்து உணர வேண்டிய ஒன்று. 

எனவே 

"சொல்லாத நுண் உணர்வு "  என்றார்.

இது வரை யாரும் சொல்லாதது. சொல்லவும் முடியாது. 


உணர்வு அறிய மெய் ஞானம் என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம்
தவம் முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்.

உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்பார் பிறிதொரு இடத்தில் 

அது சிந்தனை அற்ற இடம். 

1 comment:

  1. ///உணர்வு அ/றி/ய மெய் ஞானம் என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்///
    Please correct the above.

    ReplyDelete