Thursday, January 15, 2015

திருக்குறள் - அடக்கம் அமரருள் உய்க்கும்

திருக்குறள் - அடக்கம் அமரருள் உய்க்கும் 


அடக்கம் என்பதை ஒரு ஒழுக்கமாக நம் முன்னவர்கள் கருதி இருக்கிறார்கள்.

அடக்கம் என்பது ஒரு நல்ல குணமா ? அதை நம் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டுமா ?

அடக்கம் என்பது ஒரு தாழ்வு மனப்பான்மையை  வளர்த்து விடாதா ? அடக்கமாக இருப்பவர்களை உலகம் எப்படி இனம் கண்டு கொள்ளும் ? நம்மை நாம் எடுத்து சொல்லாவிட்டால் எப்படி நாம் முன்னேற முடியும் ?

எனவே அடக்கம் ஒரு தேவையற்ற குணம் என்று வாதிப்பவர்களும் உண்டு.

வள்ளுவர் சொல்கிறார்....அடக்கம் ஒருவனை தேவர்களிடையே சென்று சேர்த்து விடும். அடங்காமை பெரிய இருளில் தள்ளி விடும் என்று.


பாடல்

அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.

சீர் பிரித்த பின்

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும்.

பொருள்

அடக்கம்  = அடக்கமான குணமானது

அமரருள் உய்க்கும் = ஒருவனை தேவர்களிடம் சேர்த்து விடும்

அடங்காமை = அடங்காமை என்ற குணம்

ஆர் இருள் = அடர்ந்த இருளில்

உய்த்து விடும்.= சேர்த்து விடும்

மேலோட்டமாக பார்த்தால் பொருள் அவ்வளவுதான்.

சற்று ஆராய்ச்சி செய்வோம்.

எப்படி, அடக்கம் ஒருவனை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் ?

அந்த கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னால், அடக்கம் என்றால் என்ன என்று ஆராய்வோம்.

எதில் அடக்கம் வேண்டும் ?

மன, மொழி, மெய்களில் அடக்கம் வேண்டும்.

மன அடக்கம்.

பேச்சில் அடக்கம்.

புலனடக்கம்.


மனம் அடங்கினால் சிந்தனை ஒன்று படும். சிதறாத சிந்தனை அறிவை வளர்க்க உதவி செய்யும். அலை பாயாத மனம் இருந்தால் ஆசை தறி கெட்டு ஓடாது.

மொழி அல்லது பேச்சில் அடக்கம். தேவையற்ற பேச்சுக்கள் , புரணி,  புரட்டு,பொய்,  என்று சொற்குற்றங்கள் விலகிப் போகும் பேச்சில் அடக்கம் இருந்தால்.

புலன் அடக்கம்  - கட்டுப்பாடு அற்று ஓடும் புலன்களை அடக்கினால் வாழ்வில்  பல சிக்கல்கள் தவிர்க்கப்படும். அளவுக்கு அதிகமான தீனி, கட்டுபாடற்ற பெண்ணாசை இவை எல்லாம் மனிதனை வீழ்த்தும். புலன் அடக்கம் இருந்தால் வாழ்வில் வெற்றிகள் வந்து சேரும். சேர்ந்த வெற்றிகள் நிலைக்கும்.

இந்த மூன்றையும் அடக்கினால் வாழ்வு சிறக்குமா இல்லையா ?

இந்த குறளை பற்றி மேலும் சிந்திப்போம்.

  


No comments:

Post a Comment