Friday, January 2, 2015

இராமாயணம் - தாரையின் ஆளுமை - தாமரை வதனம் சாய்த்து

இராமாயணம் - தாரையின் ஆளுமை - தாமரை வதனம் சாய்த்து 


தன் தோழிகளுடன் தாரை இலக்குவனை சந்திக்க வருகிறாள். அவர்களை கண்டு இலக்குவன் தயங்கி, முகத்தை திருப்பிக் கொண்டு நிற்கிறான்.

மாமியார்கள் நடுவில் நின்ற மருமகனைப் போல வெட்கப்பட்டு நின்றான் என்றான் கம்பன்.

ஒரு புறம் இலக்குவன் தயங்கி, நாணி நிற்கிறான்.

மறுபுறம், தாரை அவனை நேரில் பார்க்க நாணி தோழிகள் கூட்டத்தின் நடுவில் நிற்கிறாள். தோழிகளை விலக்கிக் கொண்டு வருகிறாள்.

பாடல்

தாமரை வதனம் சாய்த்து,
    தனுநெடுந் தரையின் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான்
    ஆம் என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம்
    பொது இடைப் புகுந்து, பொன்தோள்
தூமன நெடுங்கண் தாரை,
    நடுங்குவாள், இனைய சொன்னாள்.

பொருள்


தாமரை வதனம் சாய்த்து = தாமரை போன்ற முகத்தை சாய்த்து

தனு = வில்லை

நெடுந் தரையின் ஊன்றி = நீண்ட தரையின் மேல் ஊன்றி. ஒரு support -க்கு.

மாமியர் குழுவின் = மாமியார்கள் குழுவின் முன்

வந்தான் ஆம் என = வந்ததைப் போல

மைந்தன் நிற்ப = இலக்குவன் நிற்க

பூமியில் = பூமியின் மேல்

அணங்கு அனார்தம் = வானுலகப் பெண்களைப் போன்ற பெண்களின்

பொது இடைப் புகுந்து = நடுவில் இருந்து

பொன் தோள் = பொன் போன்ற தோள்களை கொண்ட

தூமன = தூமையான மனத்தைக் கொண்ட

நெடுங்கண் தாரை = நீண்ட கண்களைக் கொண்ட தாரை 

நடுங்குவாள், = நடுங்கிக் கொண்டு

இனைய சொன்னாள் = இவற்றைச் சொன்னாள்.



1 comment:

  1. ஹாஹா... மாமியார்கள் முன் மருமகன்!

    ReplyDelete